மதுரை, மார்ச் 22- ‘உயர் கல்வி நிறுவனங்களுக்கான என்.அய்.ஆர்.எப்., தரவரிசைப் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிடக்கூடாது’ என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டி செல்லமுத்து தாக்கல் செய்த பொதுநல மனு: தேசிய நிறுவன தர வரிசை கட்டமைப்பான என்.அய்.ஆர்.எப்., வாயிலாக இந்தியாவிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தரவரி சையை ஒன்றிய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. கற்பித்தல், மாணவர் சேர்க்கை, தேர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அளவுகோல் அடிப்படையில் தரவரிசை அளிக்க வேண்டும். இதை சரியாக பின்பற்றாத கல்லுாரிகளுக்கு தரவரிசையில் முதலிடம் அளிக்கப்படுகிறது.
இதில், வெளிப்படை தன்மையை பின்பற்றுவதில்லை. முறைகேடு நடக்கிறது. மாணவர்கள் சரியான கல்லுாரியை தேர்வு செய்ய முடியவில்லை. 2025க்கு என்.அய்.ஆர்.எப்., தரவரிசை பட்டியல் வெளியிட தடை விதிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான ஒப்புதல், மதிப்பெண், வருமானவரித்துறை தணிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சரிபார்த்தபின் என்.அய்.ஆர்.எப்., தரவரிசை வெளியிட உத்தரவிட வேண்டும். நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.சிறீமதி அமர்வு, ‘என்.அய்.ஆர்.எப்., பட்டியலை வெளியிடக்கூடாது. ஒன்றிய கல்வித்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஏப்., 24க்கு ஒத்தி வைக்கப்படுகிறது’ என, உத்தரவிட்டது