ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான கண்காணிப்புக் குழு கூட்டம் 29ஆம் தேதி நடக்கிறது

viduthalai
1 Min Read

சென்னை, மார்ச்22- ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான கண்காணிப்புக் குழு கூட்டம் வரும் 29ஆம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டிருப்பதாவது:-

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம் 1989, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) விதிகள் 1995 மற்றும் திருத்த விதிகள் 2016 மற்றும் 2018, விதி-16இன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைவராகக் கொண்டு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோருடன் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை / மக்களவை மற்றும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுடன் வருகிற 29ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட தீருதவி, மறுவாழ்வு மற்றும் அவை பற்றிய விவரங்கள், இந்தச் சட்டத்தின்கீழ் வழக்குகள் தொடுத்தல், சட்டத்தைச் செயற்படுத்தும் பல்வேறு அலுவலர்களின் / அமைப்புகளின் பங்கு, பணி மற்றும் மாநில அரசால் பெறப்படும் பல்வேறு அறிக்கைகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) திருத்தச் சட்டம் 2015-இல் அத்தியாயம் 4-ஏ-இல் உள்ள பிரிவுக் கூறு 15 ஏ(11)-இன்படி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் ஆகியவை குறித்து இந்த கண்காணிப்புக் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது.

இவ்வாறு அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *