தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழ்க் குறியீடு திராவிட மாடல் ஆட்சி – மாட்சிக்கு எதிராக ‘தொடர்ந்து பேசுங்கள்’ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே!

viduthalai
5 Min Read

– வீ.குமரேசன்

மொழி உணர்வுடன் மொழி உரிமைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, உயிரிழப்பு எனவரலாற்றுத் தழும்புகளைக் கொண்டது தமிழ்நாடு. தமிழ்நாடு அரசு, இந்த ஆண்டு (2025-2026) நிதிநிலை அறிக்கையின் முகப்பிலும், உள்ளடக்கத்திலும் எங்கெல்லாம் இந்திய நாணய மதிப்பைக் குறிப்பிட வேண்டிய தேவையுள்ளதோ அந்த இடங்களில் தேவநகரி குறியீடான ‘₹’ என்பதற்குப் பதிலாக ‘ரூ’ எனும் தமிழ் வரிவடிவத்தை பயன்படுத்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் எழுத்து

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ் எழுத்தான ‘ரூ’ என பயன்படுத்தியதற்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திலே பொங்கி எழுந்துள்ளார். இதுவரை தமிழ்நாட்டிற்கு முறையாக வழங்கிடவேண்டிய நிதியை – ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையின்படி கொடுக்க வேண்டிய நிதியை வழங்கிடவில்லை – அதற்காக தமிழ்நாடு முதலமைச்சரும், அமைச்சர்களும், மாநில வளர்ச்சியில் அக்கறை கொண்ட பலரும் நேரில் சந்தித்து வேண்டியும் – நிதியை ஒன்றிய அரசு இதுவரை வழங்கிடவில்லை.

ஞாயிறு மலர், தமிழ்நாடு

நிதி ஆண்டு இறுதியை நெருங்கும் வேளையிலும் ஒன்றிய அரசு நிதியை வழங்குவதற்குப் பதிலாக ஹிந்தி மொழி சார்ந்தும், வர்ணாஸ்ரம கல்விமுறையினை உள்ளடக்கிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை தமிழ்நாடு என ‘வெண்டைக்காய் விளக்கங்களை’ உரிய துறையின் ஒன்றிய அமைச்சர் சொல்லி வந்த வேளையிலும், ஒன்றிய நிதி அமைச்சர் வாய் திறக்கவில்லை; தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழைத் தாய் மொழி என சொல்லிக் கொள்ளும் நிர்மலா சீதாராமன் வாய்மூடி மவுனமாக இருந்தார்.

தமிழ்நாடு அரசானது தமிழ் எழுத்து குறியீட்டை, (ரூ) நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டவுடன் ‘தேசிய லட்சினையை’ தமிழ்நாடு ஒதுக்கிவிட்டதாக பொங்கிப் பேசியுள்ளார். ஒருபடி மேலே போய் இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது என தமிழ் வரி வடிவம் பயன்படுத்தப்பட்டது குறித்து வெடித்துள்ளார்.

உணர்ச்சிமயமாக பேசியுள்ளார் தேவநகரி குறியீட்டிற்கு “₹” வக்காலத்து வாங்கியுள்ளார். ‘நீஷ பாஷை’ என ஆரிய ஆதிக்கக் கும்பலால் குறிப்பிடப்பட்ட தமிழ்மொழியில் குறியீடு என்பது அவர் ஏற்றுக்கொண்ட கருத்தியலுக்கு எதிரானதே. ஆனால் இந்திய அரசமைப்பு சட்ட விதிகளுக்கு எதிரானது என குற்றம் சாட்டியுள்ளார்.

ஆரியக் கருத்து

மொழிவழி மாநிலங்கள் என்பது இந்திய அரசமைப்புச் சட்டப்படி அங்கீகாரம் பெற்றதே. மொழி வழி மாநிலம் என்பதை ஏற்றுக்கொண்ட பின்னர் அந்தந்த மாநில மொழியில் வரிவடிவத்தினை – குறியீட்டினை பயன்படுத்துவது எப்படி அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும்? தமிழ்நாட்டில் பிறந்து, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டதாகக் கூறுபவர் தமிழ் எழுத்துக் குறியீட்டிற்கு எதிராக பேசியுள்ளார்; இதுதான் இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நிலவிவந்த – இன்றைக்கும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் – கருத்தியல் உள்ளடக்கமாக விளங்கிடும் ஆரியக் கருத்து. இதனை முறியடிக்கத்தான் தந்தை பெரியார், ‘தமிழ்’ என்று சொல்லிக் கொண்டு தமிழராக மாறிட துடித்திடும் ஆதிக்கச் சக்திகளை இனம் காண உண்மையான தமிழரை, ஆரிய அடக்குமுறைக்கு ஆளான மக்களை ‘திராவிடர்’ எனக் குறிப்பிட்டுப் பேசி வலுவூட்டி வந்தார். தந்தை பெரியார் கூறி வந்ததை நிரூபிக்கும் வகையில்தான் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உணர்ச்சிமயமாக பொங்கி எழுந்து, தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு எதிராகப் பேசியிருக்கிறார்.

அரசமைப்புச் சட்டத்தை மீறி

அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளுள் தமிழ் மொழியும் உண்டு. மொழிவழி மாநிலங்களாக அரசமைப்புச் சட்டத்தின்படி இந்தியத் துணைக் கண்ட நிலப்பரப்பை எல்லை வரையறை செய்துவிட்டு, அந்த அரசமைப்புச் சட்டத்தில் அங்கீகாரம் பெற்ற மொழியாக உள்ள தமிழ் மொழியில் நிதிநிலை அறிக்கை மற்றும் நிதி சார்ந்த தளங்களில் தமிழ்மொழி குறியீட்டைப் பயன்படுத்துவது எப்படி அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக இருக்க முடியும்? அரசமைப்புச் சட்டத்தினை காத்திடுவேன் என, தான் பதவி ஏற்கும்பொழுது உறுதிமொழி எடுத்த நிர்மலா சீதாராமன்தான் இப்பொழுது அரசியலமைப்புச் சட்டத்தை மீறிப் பேசுகிறார்.
பயன்படுத்தவில்லையா?

இப்படி அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்த மொழிகளுள் தமிழ்மொழியில்தான் தமிழ்வரி வடிவ குறியீடு முதன்முதலாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? ஏற்கெனவே பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான ஒடிசாவிலும், அசாமிலும் முறையே ஒடியா மொழி, அசாமி மொழி வரி வடிவங்கள் அந்தந்த மாநில நிதிநிலை அறிக்கைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறதோ? அவையெல்லாம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கவனத்திற்கு வரவில்லையா? கவனத்தில் கொண்டு வரப்பட்டாலும், பா.ஜ.க. தலைமையில் அந்த மாநிலங்களில் ஆட்சி நடைபெறுவதால் வாய் திறக்க மறுக்கிறாரா? அவ்வளவு தூரம் போவானேன்? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும், தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவரும் சமூக ஊடகங்களில் தங்களது தனிப்பட்ட முகநூல் (Facebook), சுட்டுரை (tweet) ஆகிய தளங்களில் இன்று தமிழ்நாடு அரசு பயன்படுத்தியுள்ள ‘ரூ’ குறியீட்டைப் பயன்படுத்தியதே இல்லையா?

மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரியினை முறைப்படி தமிழ்நாட்டிற்கு பகிர்ந்து அளித்திடுவதில்லை; பகிர்ந்து கொடுக்க நடைமுறைக்கு ஒவ்வாத காரணங்களைச் சொல்லி மறுத்து வருவது, பா.ஜ.க. கடைப்பிடித்து வரும் பாசிச அணுகுமுறையினை புலப்படுத்திடுவதாகவே இருக்கிறது.

புறக்கணிக்கப்படும் தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இயற்கையின் சீற்றங்களான புயல், பெருமழை, சூறாவளி ஆகியவற்றால் தொடர்ந்து மனித உயிரிழப்பு, கால்நடைச் செல்வ இழப்பு, சொத்து பொருட்கள் இழப்பு, விவசாய நிலம் பாழாய்ப் போனது என தமிழ்நாட்டு மக்கள் துன்பத்திற்கு ஆளான வேளையில் நிதி அமைச்சரான நீங்கள் சில சமயங்களில் நேரில் வந்து பார்த்தீர்கள்! பார்த்து விட்டு தமிழ்நாடு மக்களுக்கு உரிய நிதி உதவியை, உங்களது ஆளுகையில் உள்ள நிதி அமைச்சகத்திலிருந்து வழங்கியது உண்டா? மற்ற வடமாநிலங்களில் இயற்கைச் சீற்றங்களுக்குப் பின்னர் உடனே பார்வையிட்டு மறுநாளே நிதி உதவி வழங்கிய நிகழ்ச்சிகள் ஏராளம் உள்ளனவே! தமிழ்நாட்டைச் சார்ந்த ஒன்றிய நிதி அமைச்சருக்கு, மற்ற மாநிலங்களைப் போல, தமிழ்நாட்டைப் பரிவுடன் பார்த்து நிதி உதவி அளித்திட இதுவரை எந்த முயற்சியும் எடுத்ததாக நிகழ்வில்லையே! அப்பொழுதெல்லாம் வாய்மூடி இருந்துவிட்டு, இன்றைக்கு தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கையிலும், நிதி பயன்பாட்டிலும் தமிழ்க் குறியீட்டைப் பயன்படுத்திடும் பொழுது மட்டும் பொங்கி எழுந்து பேசுவதற்கு அவருக்கு தார்மீக உரிமை உள்ளதா?

ஏன் இந்த ஒவ்வாமை?

தனக்கும் தமிழ் தெரியும் என ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ் இலக்கியக் கூற்றுகளை மேற்கோள்காட்டி பெருமிதப்படும் நிதி அமைச்சர், அதே தமிழ்மொழியில் நிதி குறியீடு குறித்து எதிர்ப்பு தெரிவித்து வருவது எந்த வகையில் நியாயம்? நிதி அமைச்சர் பொங்கி எழுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற தத்துவத்தின்படி திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறுவதுதான் அவர்களுக்கு ஒவ்வாமையாக இருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியின் மகத்துவம்

ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள் நிதி அமைச்சர் அவர்களே! தமிழ்நாடு அரசின் மக்கள் நலம் சார்ந்த ஒவ்வொரு செயல்பாட்டையும் தமிழ்நாட்டு மக்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள். திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பல வகையில் பயன்பெற்று முன்னேறி வருகிறார்கள்.

இப்படி தமிழ்நாடு சார்ந்த, தமிழ்மொழி பண்பாடு சார்ந்த ஒவ்வொரு செயலையும் விமர்சிக்கும் உங்களது பேச்சு தொடர, தொடர, திராவிட மாடல் ஆட்சியின் மகத்துவம், மாண்பு பரவிக் கொண்டே வரும். தொடர்ந்து பேசுங்கள் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே! பேசுங்கள்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *