முல்லைகளே, முல்லைகளே!
உலகத் தாயின்
பிள்ளைகளே, பிள்ளைகளே
உங்களுக்கான நாள் இது
குழந்தைத் தினம் என்று
கொஞ்சுகிறது மனம்!
நாளை நீங்கள்
நாட்டை ஆளக் கூடும்!
முளையிலேயே
மூடநம்பிக்கையாம்
கிருமிகள் தாக்கக் கூடும்
மதவாதக் கள்ளிப்பாலை
மண்டைக்குள்
திணிக்கக்கூடும்
அது உங்கள் குற்றமல்ல
பெற்றோர், உற்றாரைப்
பீடித்த பெரு நோயால்
பெறப்பட்ட நஞ்சு.
படிப்பினில்
கவனம் செலுத்திடுக!
பகுத்தறிவோடு
நீங்கள் வளரும்போது
நீக்குங்கள் கிருமிகளை!
கிழக்குச் சூரியனாய்
மின்னுங்கள், மின்னுங்கள்!
குழந்தைகளுக்கு எங்கள்
கொள்கை முத்தங்கள்.
உள்ளத்தில் மலருகின்ற
வாசனை வாழ்த்துகள்!
– கவிஞர் கலி. பூங்குன்றன்
குறிப்பு: இன்று குழந்தைகள் நாள் – நேரு பிறந்த நாள்.