தமிழ்நாட்டுக்கு 5 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?

Viduthalai
2 Min Read

ஒன்றிய அரசின் பாரபட்சம் நாடாளுமன்றத்தில் அம்பலமானது!

சென்னை, மார்ச் 20- தமிழ்நாட்டில் உள்ள ராம் சர் தளங்களின் பாதுகாப்பு, மேலாண்மைக்காக கடந்த 5 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

ஈர நிலங்கள்

இந்தியாவில் உள்ள ஈரநிலங்களை பாதுகாக்க ஒன்றிய-மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஈர நிலங்களை அடையாளம் கண்டு அந்த நிலங்களை ராம் சர் தளங்களாக ஒன்றிய அரசு அறிவித்து வருகிறது. சுற்றுச்சூழல் முக்கியத்துவம், உயிரியல் பன்முகத்தன்மை வாய்ந்த சதுப்பு நிலங்கள் இவ்வாறு தேர்வு செய்யப்பட்டு அறிவிக் கப்படுகின்றன.
சதுப்பு நிலங்களை பாதுகாத்து பராமரிப்பது தொடர்பாக 1971ஆம் ஆண்டு கையெழுத்தான ஈரான் நாட்டின் ராம்சர் நகர் நினைவாக ராம்சர் தளமாக ஈரநிலங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரையில், 27 ஆயிரத்து 403 சதுர கி.மீ. ஈர நிலப் பரப்புகள் இருக்கின்றன. அதில் பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பகுதிகள் ராம்சர் தளங்களாக அறிவிக்கப்படுகின்றன.

20 ராம்சர் தளங்கள்

அந்த வகையில் இந்தியாவில் இதுவரை 89 ஈர நிலங்கள் ராம் சர் தளங்களாக ஒன்றிய அரசு அறிவித்து இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் 2002ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 20 ராம் சர் தளங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
2002ஆம் ஆண்டில் முதல் தளமாக நாகப்பட்டினம் மாவட்டம் பாயின்ட் கலிமேர் வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், 2021ஆம் ஆண்டில் 2 தளங்கள், 2022ஆம் ஆண்டு 11 தளங்கள், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் தலா 2 இடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டம், தேர் தங்கல் பறவைகள் சரணாலயம், சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயம் ஆகிய 2 இடங்கள் ராம்சர் தளங்களாக அறிவிக்கப்பட்டன.

தமிழ்நாட்டுக்கான நிதி எவ்வளவு?

இந்த நிலையில் ராம்சர் தளங்களாக அறிவிக்கப்படும் இடங்களின் பராமரிப்பு, மேலாண்மைக்காக மத்திய அரசின் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாப்பதற்கான தேசியத் திட்டத்தில் இருந்து நிதி ஒதுக்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த 2019-2020 ஆம் நிதியாண்டில் இருந்து 2023-2024ஆம் நிதியாண்டு வரையிலான 5 ஆண்டுகளில் ரூ.44 கோடியே 84 லட்சம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.1 கோடியே 37 லட்சத்து 22 ஆயிரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதுவும் 2019-2020ஆம் ஆண்டில் மட்டுமே ஒதுக்கப்பட்டது.
ராம்சர் தளங்கள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் நிலையில், 2019-2020ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை 4 நிதி ஒதுக்கப்படாதது ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. அதுவே 10 ராம்சர் தளங்களை கொண்டிருக்கும் உத்தரபிரதேச மாநிலத்துக்கு 2022-2023 ஆம் ஆண்டை தவிர மற்ற ஆண்டுகளில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *