டில்லி, மார்ச் 19- மார்ச் 24 மற்றும் 25ஆம் தேதி இந்தியா முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால் வார விடுமுறை நாட்களுடன் சேர்ந்து 4 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கங்கள் 2 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி மார்ச் 24ஆம் தேதி திங்கட்கிழமை மற்றும் 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்கள் வங்கிகள் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இத்துடன், மார்ச் 22, 23 ஆகிய தேதிகள், சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள் என்பதால், தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாத சூழல் உருவாகி உள்ளது.
வங்கி ஊழியர் சம்மேளனம், வாரத்துக்கு 5 நாட்கள் வேலை மற்றும் வங்கித்துறையில் அனைத்து நிலைகளிலும் போதுமான பணியாளர்களை நியமித்தல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி தொழிற்சங்கங்கள் மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு தழுவிய இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. முன்னதாக இந்திய வங்கிகள் சங்கத்தில் நிலுவையில் உள்ள எஞ்சிய பிரச்சினைகளைத் தீர்க்கவும், அரசு ஊழியர்களுக்கான திட்டத்தின்படி, வருமான வரியிலிருந்து விலக்கு அளிப்பதோடு, பணிக்கொடையை ரூ.25 லட்சமாக உயர்த்தவும் வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் மாதம் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் நாடு தழுவிய அளவில் 2 நாள் வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர் சங்கங்களின் அய்க்கிய மன்றம் முடிவு செய்துள்ளது.
தங்கள் கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்களுக்குப்பின் இந்த வேலை நிறுத்த முடிவை எடுத்துள்ளதாக அந்த மன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ரயில்களில் சிறப்பு ஒதுக்கீடு
இனி பெண்கள் சிரமம் இல்லாமல் ரயிலில் பயணம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண் பயணிகள், கர்ப்பிணிகளுக்கு முன்பதிவு பெட்டிகளிலும் சிறப்பு ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது.