தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டப்படும் அமைச்சர் துரைமுருகன் தகவல்

viduthalai
3 Min Read

சென்னை, மார்ச் 19- தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்ட முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டித்தர வேண்டும் என்று பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்தார்.

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2ஆவது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சட்டசபையில் கேள்வி, பதில் நேரத்தில், தாமிரபரணி நதி வற்றாத ஜீவ நதியாக உள்ளதாகவும், மழைக்காலங்களில் பெருமளவு நீர் வீணாக கடலில் கலக்கின்ற நிலையில், தாமிரபரணி ஆற்றில் 4, 5 இடங்களில் தடுப்பணை கட்டித்தர வேண்டும் என்று பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை மிக முக்கியமானது. நம்மிடம் இருக்கும் ஒரே வற்றாத நதி தாமிரபரணி தான். அத்தியாவசியமான கோரிக்கை உள்ள நிலையில் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்படும்” என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது!
– ராகுல் காந்தி

தமிழ்நாடு

புதுடில்லி, மார்ச் 19- ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று தோ்தல் ஆணையம் நேற்று (18.3.2025) தெரிவித்திருந்தது.
இதுபற்றி மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதாக அறிவித்துள்ளது. அதிக வாக்காளர்களின் பெயர்களைச் சேர்த்தல், தேவையற்ற பெயர் நீக்கம், போலி வாக்காளர்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் மீண்டும் மீண்டும் எழுப்பி வருகின்றன.

வாக்காளர் அடையாள அட்டையுடன்
ஆதார் எண் இணைக்கும் பணி விரைவில் தொடங்கும்
தேர்தல் ஆணையம் தகவல்

புதுடில்லி, மார்ச் 19- வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுவது குறித்து தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற அறிவுரையின்படி, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண் இணைக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும். இதற்காக ஆதார் நிபுணர்களுடன் தொழில்நுட்ப ஆலோசனை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய குடிமக்களுக்கு மட்டுமே இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை வழங்க முடியும் எனவும், அதே நேரத்தில் ஆதார் அட்டை ஒரு நபரின் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண் இணைப்பு

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இதற்காக நிபுணர்களுடன் விரைவில் தொழில்நுட்ப ஆலோசனையை தேர்தல் ஆணையம் நடத்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருசில மாநிலங்களில் ஒரே மாதிரி வாக்காளர் அடையாள எண் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக உள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.

இதுவரை வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு எந்தவித காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை. மேலும், இணைக்காதவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என ஒன்றிய அரசு உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *