வாக்காளர் குளறுபடி தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு! மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

viduthalai
1 Min Read

புதுடில்லி, மார்ச் 18 வாக்காளர் அடையாள அட்டை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் செய்த குளறுபடி, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு வாக்காளர் பட்டியலில் குளறுபடி, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விதி எண் 267இன் கீழ் ஒத்திவைப்பு தாக்கீது திங்கள்கிழமை (17.3.2025) காலை வழங்கினர்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்க மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மறுப்பு தெரிவித்தார்.

வெளி நடப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவைக் குறிப்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துகள் இடம்பெறாது என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அவை நடவடிக்கைகளை புறக்கணித்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த சுகேந்து சேகர் ராய், மவுசம்பிநூ, சுஷ்மிதா தேவ் மற்றும் காங்கிரஸின் பிரமோத் திவாரி ஆகி யோர் தேர்தல் ஆணையத்தின் குளறுபடி தொடர்பாகவும், திமுகவின் வில்சன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் சிவதாசன் ஆகி யோர் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாகவும் விவாதிக்க தாக்கீது வழங்கினர்.

மேற்கு வங்கத்தின் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு எதிராக நடைபெறும் அட்டூழியங்கள் குறித்து விவாதிக்க பாஜக எம்பி சமிக் பட்டாச்சார்யா தாக்கீது வழங்கியிருந்தார்.

மேலும், எலான் மஸ்க் நிறுவனத்துடன் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து விவாதிக்க இந்திய கம்யூனிஸ்ட் எம்பி பி. சந்தோஷ் குமார் தாக்கீது அளித்திருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *