சென்னை, மார்ச் 15- வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல், பெண்கள் பெயரில் சொத்துகளை பதிவு செய்தால் அதற்கான பதிவுக் கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.
ரூ.10 லட்சம் வரையிலான மனை, சொத்து பெண்கள் பெயரில் பதிவு செய்தால் கட்டணம் குறைக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
பெண்களின் வளர்ச்சி
இந்தியாவின் மற்ற மாநிலங்களை போல அல்லாமல், தென் மாநிலங்களில் பெண்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதில் தமிழ்நாடு தனித்துவமாக இருந்து வருகிறது. நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை பெண்களின் முன்னேற்றங்களுக்கு ஏராளமான வளர்ச்சி திட்டங்களை அறிவித்திருக்கிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கான பதிவு கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படும் என்று அறிவித்திருப்பது மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.
மிகுந்த வரவேற்பு
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம், திருமண நிதி உதவித் திட்டங்கள், இலவச தையல் இயந்திரத் திட்டம் ஆகியவை தமிழ்நாட்டில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கின்றன.
இதன் தொடர்ச்சியாகவே தற்போது பதிவு கட்டணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,
“மகளிருக்கு சம சொத்துரிமை வழங்கிடும் சட்டத்தை கடந்த 1989ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் நிறைவேற்றினார். அவர் வகுத்துக் தந்த பாதையில் வெற்றி நடை போடும் நமது திராவிட மாடல் அரசு, மகளிருக்கு தமிழ் சமூகத்தில் உயர்ந்த இடத்தையும் உரிய அதிகாரத்தையும் உறுதி செய்தும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மகளிருக்கு சம பங்கு
அதன் தொடர்ச்சியாக சமூகத்தில் மட்டுமின்றி அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சம பங்கை உறுதி செய்திடும் வகையில், வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் ரூ.10 லட்சம் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துக்கள் பெண்கள் பெயரால் பதிவு செய்யப்பட்டால் அத்தகைய ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படும்.
தற்போது மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவுகளில் 75 சதவீதம் பதிவுகள் இந்த அறிவிப்பினால் பயன்பெற இயலும். இதன் மூலம் மகளிர் சுய சார்பும் பொருளாதார சுதந்திரமும் மேலும் உயர்ந்திடும் என்று இந்த அரசு நம்புகிறது. மகளிர் நலன் காக்க சுய உதவிக் குழுக்கள், விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப்பெண், தோழி பணிபுரியும் பெண்கள் விடுதி என பல்வேறு முன்னோடி திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வண்ணம் நமது அரசு செயல்படுத்தி வருகிறது.
பெண்களின் பங்களிப்பு
இதற்கு அடுத்த கட்டமாக, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு மேலும் அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு வரும் 5 ஆண்டுகளில் 1 லட்சம் மகளிரை தொழில் முனைவோராக உயர்த்தும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் 20 சதவீதம் மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கி கடன் பெற்று, மகளிர் பல்வேறு தொழில்களை தொடங்கிட உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள், விற்பனைக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.