சென்னை, மார்ச் 15- இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் வருகிற 24, 25ஆம் தேதிகளில் வேலை நிறத்தம் நடைபெறும் என வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பேச்சு வார்த்தை
பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்கள், அதிகாரிகள், இயக்குநர்கள் உள்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்து இருந்தன. 9 வங்கி ஊழியர் சங்கங்களின் உயரிய அமைப்பான வங்கி சங்கங்கள் அய்க்கிய கூட்டமைப்பு இதற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து, இந்திய வங்கிகள் சங்கம், அய்க்கிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
பேச்சுவார்த்தையின்போது, வாரத்தில் 5 நாள் வேலையை அமல்படுத்த வேண்டும், பணித்திறனை ஆய்வு செய்தல் மற்றும் பணித்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை ஆகிய உத்தரவுகளை திரும்பப்பெற வேண்டும், பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும், அதற்கு வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் அய்க்கிய கூட்டமைப்பு முன்வைத்தது. ஆனால், இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக வங்கி சங்கங்கள் அய்க்கிய கூட்டமைப்பு கூறியுள்ளது.
வேலை நிறுத்தம்
‘முக்கிய கோரிக்கைகள்’ எவற்றையும் இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக்கொள்ளாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக அய்க்கிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எல்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். எனவே, ஏற்கெனவே திட்டமிட்டபடி, 24 மற்றும் 25ஆம் தேதிகளில் நாடுதழுவிய 2 நாள் வங்கி ஊழியர்கள் வேலை நிறத்தம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.