சென்னை, மார்ச் 13- காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை தங்கள் அடையாள அட்டைகளை காண்பித்து அரசுப் பேருந்துகளில், பணி செய்யும் மாவட்டத்துக்குள் இலவசப் பயணம் மேற்கொள்ள வசதியாக நவீன அடையாள அட்டையை சென்னை பெருநகர காவல் ஆணையர் வழங்கி அத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கைதிகளை வழிக்காவலுக்கு அழைத்துச் செல்லும் காவல் துறையினர் அரசுப் பேருந்துகளில் பயணச் சீட்டு பெற வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான வாரண்ட் இருந்தாலே போதுமானது. இதேபோல், பணி நிமித்தமாக செல்லும் காவல் துறையினரும் அரசுப் பேருந்துளில் பெரும்பாலும் பயணச் சீட்டு எடுப்பது இல்லை. ஆனால், சில நேரங்களில் சில நடத்துநர்கள் கண்டிப்புக் காட்டி எடுக்க வலியுறுத்துவார்கள். இதனால், இரு தரப்பினரிடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டது.
அடையாள அட்டை
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப் பேரவையில் காவலர் முதல் ஆய்வாளர் வரை அடையாள அட்டைகளை காண்பித்து பேருந்துகளில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்துக்குள் பயணம் செய்யலாம்.
இதற்காக நவீன அடையாள அட்டை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் துறையினருக்கு அரசுப் பேருந்துகளின் இலவசப் பயணம் மேற்கொள்ளும் வகையில் நவீன அடையாள அட்டை தயார் செய்யும் பணி முடுக்கி விடப்பட்டது.
முதற்கட்டமாக 11,021 காவல் துறையினருக்கு நவீன அடையாள அட்டைகள் தயார் செய்யப்பட்டது. இந்த அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 11) நடைபெற்றது. காவல் ஆணையர் அருண் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பிரபுசங்கர் முன்னிலையில் நவீன அடையாள அட்டைகளை 10 காவல் துறையினருக்கு வழங்கி, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.