கருநாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
புதுடில்லி, மார்ச் 12 டில்லியில் காவிரி ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் காணொலிக் காட்சியின் வழியாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 38ஆவது கூட்டம் நேற்று (11.3.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கருநாடகா மாநில அரசின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்படி தமிழ்நாட்டின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில் நுட்பகுழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் நீர் இருப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிதிற்கு கருநாடகா காவிரியில் இருந்து தரவேண்டிய நீர் விவகாரம், நீர் திறப்பு தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கூட்டத்தின் முடிவில், மார்ச் முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 7.5 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட கருநாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இதன்படி மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்களுக்கும், ஒவ்வொரு மாதமும் தலா 2.5 டி.எம்.சி. தண்ணீரை கருநாடகா திறந்து விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.