பெங்களூரு, மார்ச் 9- ஹிந்தித் திணிப்பை அதிக அளவில் செய்து மாநில மொழியை அழிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும் என்று சட்டப் பேரவை காங்கிரஸ் உறுப்பினர் நயனா மோட்டம்மா தெரிவித்தார்.
ஹிந்தித் திணிப்பு
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் உறுப்பினர் நயனா மோட்டம்மா பேசும்போது, ‘மாநிலத்தில் இருந்து ஒன்றிய அரசுக்கு ரூ.1 வரி செலுத்தினால், மாநிலத்துக்கு 15 பைசாவுக்கும் குறைவான வரிப் பங்குதான் வருகிறது.
ஒன்றியத்தில் ஆளும் பாஜ தலைமையிலான ஆட்சி, அதிகம் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த வேண்டும். நாடு மற்றும் மக்கள் நலனுக்காக மாநிலத்தின் வரிப் பங்கை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று பாஜ குரல் எழுப்ப வேண்டும்.
கன்னடத்தின் வளர்ச்சிக்காக, கன்னட ஆதரவு நிகழ்ச்சிகளுக்காக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒன்றிய அரசு ஹிந்தித் திணிப்பை அதிக அளவில் செய்து வருகிறது. அதை நிறுத்த வேண்டும். மாநில மொழியை அழிக்கும் முயற்சி மேற் கொள்வதை நிறுத்த வேண்டும்’ என்றார்.
நயனா மோட்டம் மாவின் பேச்சுக்கு பாஜ உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர் நரேந்திரசாமி பேசும்போது, ‘நயனா மோட்டம்மா முதல் முறையாக பேரவை உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரை பேச அனு மதியுங்கள்’ என்றார். அப்போது குறுக்கிட்ட பாஜ உறுப்பினர் உமாநாத் கோட்டியான், எத்தனை முறை வேண்டுமானால் வெற்றி பெற்று வரட்டும். பேசும்போது எச்சரிக்கை யாக இருக்க வேண்டும்’ என்றார்.
ஹிந்தி எதிர்ப்புக் குரல்
இதில் ஆத்திரமடைந்த நயனாமோட்டம்மா, பாஜ உறுப்பினர்களின் பேச்சுக்கு பதில் கொடுத்தார்.
உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் ஒன்றிய அரசு, மாநிலத்திற்கு வழங்க வேண்டிய வரிப் பங்கை சரியாக வழங்கியுள்ளதா? மாநிலத்தில் ஹிந்தி மொழியை திணிக்க முயற்சிக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையில் கடும் வாக்குவாதம் நடந்தது. சட்டப் பேரவை தலைவர் யு.டி.காதர் தலையிட்டு சமாதானம் செய்தார்.