சென்னை, மார்ச் 8- தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத் திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்களை 6.3.2025 அன்று அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மேலும் கைது செய்யப்படுவதைத் தடுத்திட உடனடி தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று (7.3.2025) கடிதம் எழுதியுள்ளார்.
அபராதம்
அக்கடிதத்தில் இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 6.3.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற 14 தமிழ்நாடு மீனவர்களை அவர்களது மீன்பிடி விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள மற்றுமொரு சம்பவம் குறித்து மிகுந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ள முதலமைச்சர், 2025ஆம் ஆண்டில், கடந்த இரு மாதங்களில். இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் கைது செய்யப்படுவது இது ஒன்பதாவது முறை என்றும், இன்றைய நிலவரப்படி 227 மீன்பிடிப் படகுகளும், 107 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் பிடியில் உள்ளதையும் ஆழ்ந்த கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது, இலங்கையில் தமிழ்நாடு மீனவர்கள் நீண்ட காலத்திற்கு சிறை வைக்கப்பட்டிருப்பதோடு, அவர்களை விடுவிக்க அதிகபட்ச அபராதத்தை விதிக்கத் தொடங்கியுள்ளனர்.
சிறைவாசம், அபராதம் மற்றும் இலங்கை சிறையில் இருக்கும் காலத்தில் ஏற்படும் வருமான இழப்பு போன்ற துன்பங்களுக்கும் அப்பால், அவர்களின் பொருளாதாரத்திற்கு உதவுக்கூடிய ஒரே ஆதாரமாக விளங்கும் அவர்களின் படகுகளையும் இலங்கை அரசு திருப்பித் தராததால், தமிழ்நாடு மீனவர்கள் தற்போது தங்களது வாழ்வாதாரத்தில் பெரும் பொருளாதார இழப்பை எதிர்கொண்டுள்ளனர் எனத் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே, கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை கடற்படை யினரால் இந்திய மீனவர்கள் மேலும் கைது செய்யப்படுவதை தடுத்திடுவதற்கு தேவையான அனைத்து தூதரக வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.