விஷக்கிருமிகளுக்கும் கேடானவை

viduthalai
3 Min Read

என்னுடைய வெளிநாடுகளின் சுற்றுப் பிரயாணத்தின்பொழுது அந்நாடுகளில் கண்டவை எல்லாம் எனக்கு பெரும் வியப்பையும், ஆச்சரியத்தையும் அளித்தன. அந்நாட்டு நிலைமையைப் போல் நம் நாட்டிலும் ஜாதி பேதமற்ற சமுதாயமும், தரித்திரமற்ற வாழ்க்கையைக் கொண்ட – மக்களைக் கொண்ட நாடாக அமைய வேண்டும் என்பதுதான் என்னுடைய முதற்கொள்கை. இதன்படி அமைவதற்கு முட்டுக்கட்டைகளாக எவை எவை உள்ளனவோ அவற்றை அழித்து அதன் மேல்தான் மேல்ஜாதி – கீழ்ஜாதி என்ற வேற்றுமையற்ற மக்களை அமைக்க முடியும்.

நான் வெளிநாடுகளுக்கு சென்றேன் என்றால், அதை என்னுடைய உல்லாசப் பிரயாணமாகவோ, வெறும் பொழுது போக்காகவோ கருதியல்ல. அங்குள்ள நிலைமை ஒவ்வொன்றையும் நேரில் கண்டு அதன்படி நடக்க வேண்டும். அவ்விதம் போல் நம் நாட்டிலும் அமைக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துக் கூறுவதற்கேயாகும். அந்நாடுகளில் ஜாதித் தொல் லைகளும், மூட நம்பிக்கை கொண்ட மக்களும் ஏன் இல்லை என்றால், அங்கு மதத்தின் பெயரைக் கூறிக் கொண்டு பிழைப்பவர்களும், கடவுளைக் காட்டி ஏமாற்றுபவர்களும் மேல்கீழ் ஜாதியென்ற வேறுபாட்டினைக் குறித்துள்ள சாஸ்திர, புராணங் களும் கிடையாது. ஆனால், நம் நாட்டில் தான் மூவாயிரம் ஆண்டுகளாக, நாம் தாழ்ந்த ஜாதி யென்றும், சூத்திரன், பஞ்சமன் என்ற இழி ஜாதியாகவும், கடவுள், மதம் போன்ற மூட நம்பிக்கைகளில் மூழ்கி அறியாமை என்னும் நோய் கொண்டவர்களாக வாழ்ந்து வருகிறோம்.

நம் நாட்டினைத் தவிர, உலகத்தின் ஏனைய நாடுகளில் ஒன்றிலாவது இங்குள்ளதைப் போன்று பிறவியின் பெயரால் தாழ்த்தப்பட்டவன் மேல் ஜாதிக்காரன் என்ற வேற்றுமையே கிடையாது. எண்ணிக்கையற்ற கடவுள்களும், அவற்றுக்கு குரங்கு, நாய், கழுகு, பாம்பு, பன்றி போன்ற பல உருவங்களும் உள்ளன என்ற மூடக் கொள்கைகள் கிடையாது. ஆகவேதான், அவர்கள் பகுத்தறிவாளர்களாகவும், விஞ்ஞானத்தில் உயர்ந்த மேதாவிகளாகவும், நாகரிகத்தில் சிறந்தவர்களாகவும் விளங்குகிறார்கள். இவ்விதம் வெளிநாடுகளின் மேன்மையும், அந்தஸ்தும் உயர்ந்து கொண்டே போகிற இத்தருணத்தில் நம்மவர்களும் இப்பார்ப்பனர்களுடைய மூடக் கொள்கைகளை அறியாமலில்லை. நாளுக்கு நாள் பார்ப்பனர்களின் பித்தலாட்டங்கள் மேன் மேலும் வெளியாகிக் கொண்டே போகின்றன. அவர்கள் இந்நாட்டில் பிழைக்க வந்த சோம்பேறிகள் என்றும், அவர்களின் பிழைப்புக்கென்றே இந்நாட்டு உரிமையாளர்களை நாட்டின் சொந்தக்காரர்களை சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் பாகுபடுத்தி நம்மிடையே கடவுள்களையும், புராணங்களையும் புகுத்தி, பகுத்தறிவற்றவர்களாக ஆக்கி விட்டனர் என்ற உண்மையை உணர்ந்த மக்கள் எவ்விதத்திலும் தங்கள் இழிவினைப் போக்கிக் கொள்ள வேண்டும்; நாமும் மனித உணர்ச்சியுடனும், தன்மானமுள்ளவர்களாக வாழ வேண்டும் என்று முற்பட்டுவிட்டனர்.

மதம், சாஸ்திரம், இதிகாசம், புராணங்கள், கடவுள்கள் – இவை போன்ற விஷக்கிருமிகளால் தாக்கப்பட்டு நோயினால் பீடிக்கப்பட்டிருந்த மக்களைக் கொண்டு பார்ப்பனர்கள் வயிறு பிழைத்து வந்தனர். இப்பொழுது அவ்வித விஷக்கிருமிகளை அழித்தும், தீயிட்டுக் கொளுத்தியும் அறியாமை நோயை நீக்கி வாழுகின்ற தன்மானமுள்ள மக்களாக அமையும் தருணத்தில் இப்பார்ப்பனர்களுக்கு இங்கென்ன வேலை? இங்கு பிழைப்புக்கு வழியேதும் கிடையாது. அவர்களின் தொழிலுக்கு இங்கு இடமில்லை. ஆகவே, அவர்கள் இந்நாட்டை விட்டு அகல வேண்டும்; இல்லையேல் அகற்றப்படுவார்கள் என்றெல்லாம் எச்சரித்து வருகிறோம். இதுவரை பகுத்தறிவற்ற மக்களாக நாம் வாழ்ந்த காலத்தில்தான் அவன் நம்மை இழிவாக நடத்திப் பிழைத்துவந்தானேயன்றி, அவனுடைய அறிவின் திறமையால் அல்ல. பகுத் தறிவை அடைந்து நாகரிகம் வளர்ந்து கொண்டு, மூடக் கொள்கைகளை விட்டொழித்து, உணர்ச்சி கொண்ட சமுதாயம் உண்டாகும் காரணத்தால் தான் நாம் ஏன் பார்ப்பனர்கள் இங்கிருக்க வேண்டும்? அவர்களின் மதம், சாஸ்திரம், புராணங்கள் எதற்காக இருக்கின்றன? அவற்றை அழித்தும், நெருப்பிட்டுக் கொளுத்தவும் வேண்டும்.

(23.2.1955 அன்று துகிலி, அம்மாபேட்டை, கஞ்சனுர் திராவிடர் கழகத்தாரின் வரவேற்புக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை)
‘விடுதலை’ 3.3.1955

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *