நாகை மார்ச் 4 தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழ் நாடு அரசின் சார்பில் நாளை (மார்ச் 5) நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ள கட்சிகள், கவுரவம் பார்க்காமல் அனைவரும் பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பிரதமராக மோடி பதவியேற்றது முதல் இதுவரை இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் 3,656 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது 616 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 734 முறை மீனவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. 2016-ஆம் ஆண்டு இந்திய – இலங்கை அமைச்சர்கள் கூட்டு பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் மீறப்படுகின்றன. ஆனால், ஒன்றிய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசிடம் பிரதமர் பேச வேண்டும். கச்சத் தீவில் தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடிக்க புதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்களை உறுத்தும் வளர்ச்சி
தமிழ்நாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடரை சரி செய்ய ஒன்றிய அரசு நிதி தரவில்லை. பள்ளி மாணவர்களுக்கும் நிதி தரவில்லை. தமிழ்நாடு இந்த அளவுக்கு முன்னேறி இருப்பதற்கு காரணம் இருமொழி கொள்கைதான் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். தமிழ்நாட்டின் வளர்ச்சி ஒன்றிய அரசின் கண்களை உறுத்துகிறது. ஆங்கிலம் கற்றுக் கொண்டதால்தான் உலகத்தில் உள்ள பெரிய நிறுவனங்களில் தமிழர்கள் உயர் பதவிகளுக்கு வர முடிகிறது.
தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக மார்ச் 5-ஆம் தேதி (நாளை) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. பெரும்பான்மையான கட்சிகள் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளன. தனிப்பட்ட திமுகவுக்கான பிரச்சினைக்காக இந்தக் கூட்டம் கூட்டப்படவில்லை. எனவே, இந்தக் கட்சிகள் அரசியல் கருத்து வேறுபாடுகளை ஓரமாக வைத்துவிட்டு, தங்களது முடிவை மறுபரிசீலனை செய்து, கவுரவம் பார்க்காமல் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.