பாஜகவுடன் சிவசேனையை இணைக்குமாறு கூறினார் அமித்ஷா

Viduthalai
1 Min Read

மும்பை, மார்ச் 4 மகாராட்டிர மாநிலத்தில் முதலமைச்சர் பதவி வேண்டும் என்றால், பாஜகவுடன் சிவசேனையை இணைத்துவிடுமாறு துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிடம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக, சிவசேனை (உத்தவ்) தலைவா் சஞ்சய் ரவுத் கூறியிருக்கிறார்.
மகாராட்டிர மாநிலத்தில் முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் தேவேந்திர பட்னவீஸ், தன்னை ஓரம்கட்டிவருவதாக, கடந்த பிப்.22ஆம் தேதி அமித் ஷாவை நேரில் சந்தித்த துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே புகார் கொடுத்திருப்பார்.
அதற்கு, அமித் ஷாவோ, பாஜகவுடன் சிவசேனையை இணைத்துவிடுங்கள்.

பிறகு முதலமைச்சர் பதவியைக் கேளுங்கள் என்று கூறியிருப்பதாக சஞ்சய் ரவுத், சாம்னாவில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஷிண்டேவின் அரசியல் எதிர்காலம் மற்றும் பாஜகவில் உள்ள மாநில தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்களுக்கு இடையேயான சமநிலை போன்றவை குறித்தும் சாம்னா கேள்வி எழுப்பியிருக்கிறது.
இந்த கூற்றுக்கு, ஷிண்டேவும், மற்றொரு துணை முதலமைச்சருமான அஜித் பவார், இது நகைச்சுவைக்குரியது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேனாள் முதலமைச்சரும், இன்னாள் துணை முதலமைச்சருமான ஷிண்டேவை ஓரம்கட்டும் பணியை பட்னவீஸ் வெளிப்படையாகவே செய்து வருகிறார். இருவருக்குள்ளும் பனிப்போர் மூண்டிருக்கும் நிலையில், அமித் ஷாவை ஷிண்டே சந்தித்தது, புகார் பட்டியல் வாசிக்கத்தான் என்று கூறப்பட்டது.
இந்த சந்திப்பின்போது, தன்னை முதலமைச்சராக்குவதாக வாக்குறுதி அளித்துத்தானே கூட்டணி அமைத்தீர்கள் என்று ஷிண்டே கேட்டிருக்கலாம், அதற்கு, 132 தொகுதிகளை பாஜக வென்றுவிட்டு, வேறு கட்சித்தலைவரை எப்படி முதல்வராக்க முடியும் என்றும், பாஜகவுடன் சிவசேனையை இணைத்துவிட்டு வந்து முதல்வர் பதவியைக் கேளுங்கள் என்றும் அமித் ஷா கூறியிருப்பார் என்றும் அந்த சாம்னா கட்டுரை விவரிக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *