இலங்கையில் தமிழ்நாடு மீனவர்கள் சிறை இராமேசுவரத்தில் திருவோடு ஏந்தி மீனவர்கள் போராட்டம்

viduthalai
1 Min Read

இராமேசுவரம், மார்ச் 4 இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அந்நாட்டு கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி இராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் நேற்று (3.3.2025) திருவோடு ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை கடற்படையால் கடந்த ஜனவரி முதல் 18 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு, 131 தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், 38 மீனவர்கள் தண்டனை பெற்று, அங்குள்ள சிறைகளில் உள்ளனர். மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 42 மீனவர்கள், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் நீதிமன்றக் காவலில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தி இராமேசுவரம் மீனவர்கள் பிப். 24 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராமேசுவரம் மீனவர்கள் கடந்த 28.2.2025 அன்று தங்கச்சிமடத்தில் பட்டினிப் போராட்டத்தை நடத்தினர். பின்னர், 1.3.2025 அன்று காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினர். 2.3.2025 அன்று 3-ஆவது நாள் போராட்டத்தின்போது தமிழ்நாடு ஆளுநர் காத்திருப்பு பந்தலில் அமர்ந்திருந்த மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், ” மீனவர் பிரச்சினை குறித்து உடனடியாக தான் ஒன்றிய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக உறுதி அளித்தார். இந்நிலையில் நேற்று (3.3.2025) 4-ஆவது நாள் போராட்டத்தில் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தினர்.இதில் மீனவர் சங்கத் தலைவர்கள் சகாயம், சேசுராஜா, தேவதாஸ், எமரிட், ராயப்பன் மற்றும் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு கட்சிப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை தோல்வி

இதற்கிடையே, தங்கச்சிமடம் போராட்ட பந்தலில் மீனவர்களிடம், நேற்று (3.3.2025) மாலை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆகியோர் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை எடுத்துக்கூறி போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டனர். ஆனால், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அதற்கு ஒப்புக் கொள்ளாமல், போராட்டத்தை தொடர்வதாக அறிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *