பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை பன்னாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று வாகை சூடினர்

viduthalai
4 Min Read

திருச்சி, மார்ச் 4- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பன்னாட்டு அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டி, சிலம்பப் போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்தனர்.

தமிழ்நாடு

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி கணிதப் போட்டி, சதுரங்கப் போட்டி, சிலம்பப் போட்டி மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று பதக்கங்கள் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று பரிசுகள் வென்ற விவரம் தொகுத்து தரப்பட்டுள்ளது.

தங்கப்பதக்கம்

9ஆவது மாநில அளவிலான அபாகஸ் மற்றும் விரைவுக் கணிதப் போட்டியில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 3ஆம் வகுப்பு மாணவன் எஸ்.நகுலேஸ், 10 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்டு மாநில அளவில் முதல் இடத்தோடு தங்கப் பதக்கமும் வென்றார்.

தமிழ்நாடு

திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் ரோட்டரி சங்கம், ராக் ஃபோர்ட் சதுரங்க அமைப்பு மற்றும் திருச்சி மாவட்ட சதுரங்க விளையாட்டு சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான ரோட்டரி சதுரங்கம் 2.0 சதுரங்கப் போட்டி, திருச்சி, வாசவி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் கடந்த 23.2.2025 அன்று நடைபெற்றது.

இதில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 1ஆம் வகுப்பு மாணவி டி.ஆர்.தீபிகா 7 வயதிற்கு உட்பட்டோருக்கான சதுரங்கப் போட்டியில் பங்கேற்று மாவட்ட அளவில் முதலிடமும் தங்கப் பதக்கமும் வென்றார்.

 

தமிழ்நாடு

இதே போட்டியில் 15 வயதிற்கு உட்பட்டோருக்கானப் பிரிவில், ஏழாம் வகுப்பு மாணவன் சித்தாந்த் மாவட்ட அளவில் 16ஆவது இடமும், ஆறாம் வகுப்பு மாணவன் முகம்மது ரியாஸ் மாவட்ட அளவில் 20ஆவது இடமும் பெற்று சிறப்புப் பரிசுகள் பெற்றனர்.

உலக சாதனை

உலக இளையோர் சிலம்பக் கூட்டமைப்பு, இந்திய இளையோர் சிலம்பக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு சிலம்பக் கூட்டமைப்பு இணைந்து, திருச்சி சிறீரங்கம், ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 23.2.2025 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு மணி நேரம் கண்களைக் கருப்புத் துணியால் கட்டியபடி சிலம்பம் சுழற்றும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.

இந்த உலக சாதனை நிகழ்வில் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 5ஆம் வகுப்பு மாணவன் ஆர்.தேவ் மற்றும் 9ஆம் வகுப்பு மாணவி எஸ்.ஏ.சிறீமித்ரா ஆகியோர் கலந்து கொண்டு உலக சாதனை படைத்தமைக்காக, ஆசியா சாதனை புத்தக அமைப்பு மற்றும் இந்திய சாதனை புத்தக அமைப்பு ஆகியவை வழங்கிய உலக சாதனையாளர்களுக்கான அங்கீகாரச் சான்றிதழ்களைப் பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளனர்.

திருச்சி மாவட்ட சதுரங்க விளையாட்டு சங்கம், ஸ்டார் சதுரங்க விளையாட்டு அமைப்பு மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து நடத்திய முதலாவது பன்னாட்டு சதுரங்கப் போட்டியானது கடந்த 8.2.2025 முதல் 11.2.2025 வரை திருச்சி ஜே.ஜே.பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது

இந்தப் போட்டியில் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி ஜீ.சிறீநிஹா பங்கேற்று பன்னாட்டு அளவில் மூன்றாம் இடமும் வெண்கலப் பதக்கமும் வென்று வாகை சூடினார்.

திருச்சி சிறீ.வேலுத் தேவர் அய்யா நினைவு அறக்கட்டளை,தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டிகள் கடந்த 15.2.2025 அன்று திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றன.
தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கு பெறத் தகுதியுடைய வீரர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட இப் போட்டியில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவன் எஸ்.அரிஹரன், 14 வயதிற்குட்பட்டோருக்கான தடகளப் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடமும் தங்கப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.

கிரிக்கெட் போட்டி

சென்னை ஆவடியில் உள்ள, ஆலிம் முகம்மது சாலிக் பொறியியல் கல்லூரியில் கடந்த 1.2.2025 மற்றும் 2.2.2025 ஆகிய இரண்டு நாட்கள், உலகளாவிய இந்திய கிரிக்கெட் கூட்டமைப்பு மற்றும் சென்னை, கோட்டூர்புரம், ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய 15 வயதிற்கு உட்பட்டோருக்கான, இந்தோ-சிறீலங்கா உலகளாவிய 20-20 கிரிக்கெட் வாகையர் பட்டம் போட்டியில் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவன் எஸ்.அரிஅரன் பங்கேற்று அவரது அணி வெற்றி வாகை சூடியுள்ளது.

திருச்சி மாஸ் டேக்வேண்டோ குழுமமும், செயின்ட்.ஜோன் ஆஃப் ஆர்க் பன்னாட்டுப் பள்ளியும் இணைந்து நடத்திய, மாவட்ட அளவிலான டேக்வேண்டோ போட்டிகளில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அய்ந்தாம் வகுப்பு மாணவி சி.ஆதன்யா 35 கிலோ எடைப்பிரிவில் மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தோடு வெள்ளிப் பதக்கமும், மூன்றாம் வகுப்பு மாணவன் கே.சி.வர்ஷித், 25 கிலோ எடைப் பிரிவில், மூன்றாம் இடத்தோடு வெண்கலப் பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவனைப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

சாதனை படைத்த பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் பாராட்டு தெரிவித்து, வாழ்த்தி மகிழ்ந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *