ராமேசுவரம், மார்ச் 2 இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி முதல் 18 படகுகள் சிறை பிடிக்கப்பட்டு, 131 தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 38 மீனவர்கள் தண்டனை பெற்று, அங்குள்ள சிறைகளில் உள்ளனர். மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 42 மீனவர்கள், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் நீதிமன்ற காவலில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை சிறைகளில் உள்ள மீனவர் களையும், படகுகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் பிப். 24 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் 28.2.2025 அன்று தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். தொடர்ந்து, நேற்று (1.3.2025) தொடர் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினர். இதில் மீனவ சங்கத் தலைவர்கள் சகாயம், சேசுராஜா, தேவதாஸ், எமரிட், ராயப்பன் மற்றும் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், அதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகள், வைகைப் பாசன விவசாயிகள் சங்கத்தினரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆட்சியர் அழைப்பின் பேரில் சந்தித்த மீனவ சங்கப் பிரதிநிதிகளிடம், போராட்டத்தைக் கைவிடுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டார். ஆனால், மீனவ சங்கப் பிரதிநிதிகள் அதற்கு ஒப்புக்கொள்ளாமல், போராட்டத்தை தொடர்வதாக கூறிவிட்டுச் சென்றனர். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.