இந்திய தீபகற்பம், சிந்துவெளி நாகரிக காலத்தில் இருந்தே வெளிநாட்டினரின் வருகைக்கு ஒரு ஈர்ப்பு சக்தியாக இருந்தது, வெளிநாட்டினர் வந்தார்கள் – சென்றார்கள் – சிலர் இங்கேயே தங்கிவிட்டார்கள்.
கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன்பு ஆரியர்கள் முதலாவதாக வருகை புரிந்தனர். இது முதலாம் வருகை, கி.மு.5ஆம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளியில் குடியேறும் வரை இரண்டு அல்லது மூன்றுமுறை ஆரியர்களின் வருகை இருந்தது என்று வரலாற்று மற்றும் அகழாய்வு வல்லுநர்கள் கூறுகின்றனர். பின்னர் கி.பி.7ஆம் நூற்றாண்டு முதல் சுல்தான்களின் வருகை துவங்கியது, பின்னர் 14 ஆம் நூற்றாண்டில் முகலாயர்களின் வருகை துவங்கியது.
சுமார் 3000 ஆண்டுகளாக இவ்வாறு பலரது வருகை இருந்தபோதும் இம்மண்ணின் மைந்தர்கள் மிகவும் மேன்மையான கலாச்சாரத்தோடு நாகரிகப் பண்புடன் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் 7 ஆம் நூற்றாண்டு முதல் வேத மரபு இந்தியாவெங்கும் மெல்ல மெல்ல பரவத்துவங்கியபோது குறிப்பாக இம்மண்ணிலேயே வாழ்ந்துவந்த மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த துவங்கினார்கள். அன்றிலிருந்து இந்திய தீபகற்பத்தில் சமூகப்பிளவு உருவாகத் துவங்கியது.
கொந்தளிப்பான நிலை
15 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அய்ரோப்பியர்கள் தென் இந்தியாவில் இன்றைய கேரளாவின் கோழிக் கோட்டில் வந்து இறங்கும் வரை தென் இந்தியச் சமூகத்தில் கொந்தளிப்பான நிலை இருந்தது. பிறகு அய்ரோப்பியர்களின் வருகை மிசனரிகளின் வருகை போன்றவற்றால் தென் இந்தியாவில் கல்வி அனைவருக்கும் சென்று சேரத்துவங்கியதால் 7 ஆம் நூற்றாண்டில் இருந்து 16 ஆம் நூற்றாண்டு வரை இருண்ட உலகில் இருந்த தென் இந்தியர்களுக்கு கல்வி வெளிச்சம் கிட்டவும் மீண்டும் தங்கள் வாழ்க்கைத்தரத்தை உடனடியாக உயர்த்திக் கொள்ளத் துவங்கினர்.
இந்த நிலையில் வடக்கே பெரும் பின்னடைவு ஏற்பட்டது, அங்கே கல்வி அறிவு எளிதில் சென்றடையாத காரணத்தால் மக்களிடையே பெரும் சமூகப்பிளவுகள் எல்லா இடத்திலும் அதிகமாகவே காணப்பட்டது. சுதந்திரப் போராட்டகாலமான 1910 களில் துவங்கி 1947 வரையும் நீடித்தது. இதனால் தெற்கு மற்றும் வடக்கு என இரண்டு இந்தியா தெளிவாக தெரியத் துவங்கியது. இது ஒருவகை பொறாமையைக்கூட உருவாக்கியது அதே போல் பரந்துவிரிந்த கங்கைச்சமவெளி ஹிந்தி பெல்ட் எனப்படும் பகுதிகள் அனைத்திலும் மக்கள் தொகை அபரிதமாக இருந்தது
டில்லியில் அமைந்திருந்த இம்பீரியல் சட்டமன்ற கவுன்சில், அதன் மத்திய சட்டசபையை கீழவையாகவும், மாநிலங்கள் அவையை மேலவையாகவும் கொண்டிருந்தது,
அந்த மேல்நிலையை மேலும் உயர்த்தியது. முகம்மது ஹபிபுல்லா, ஏ.ரங்கசாமி அய்யங்கார், எஸ்.சிறீனிவாச அய்யங்கார், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ஆற்காடு ராமசாமி முதலியார், தங்குதுரி பிரகாசம், அனந்தசயனம் அய்யங்கார், டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார், வி.வி.கிரி, எஸ்.சத்தியமூர்த்தி, என்.ஜி.ரங்கா, சி.என்.முத்துரங்க முதலியார், டி.எஸ்.எஸ்.ராஜன், கே.சந்தானம், எம்.சி.ராஜா, பொப்பிலி ராஜா மற்றும் என்.சிவராஜ் போன்ற புகழ்பெற்ற நபர்கள் சட்டமன்ற அமர்வுகளுக்காக வடக்கு நோக்கி செல்லும் ரயில்களில் டில்லிக்கு ‘செல்வதை’ பார்க்கும் போது அரசியல் மய்யம் டில்லியில் உள்ளது என்ற உணர்வை ஊட்டியது.
அதாவது வட இந்தியாதான் அரசியல் தலைமையிடமாக உள்ளது என்ற உணர்வை வலுப்படுத்தியது. பின்னர், அரசியலமைப்பு சபையில் என்.கோபாலசாமி அய்யங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், ராஜாஜி, ஜெரோம் டி’சூசா, கே.காமராஜ், ஓ.வி.அழகேசன், சி.சுப்பிரமணியம், வி.அய்.முனுசாமி பிள்ளை மற்றும் சில குறிப்பிடத்தக்க தென்னிந்திய பெண்கள் – அம்மு சுவாமிநாதன், ஜி.துர்காபாய், ஆனி மாஸ்கரீன், தாட்சாயணி வேலாயுதம் – மற்றும் அடுத்தடுத்த லோக்சபாக்களும் ராஜ்யசபாவும் ஏ.கே. கோபாலன், டி. நாகி ரெட்டி, சி.என்.அண்ணாதுரை, பி.சுந்தரய்யா, பனம்பிள்ளி கோவிந்த மேனன், சி.எச்.முகமது கோயா, எம்.ருத்னசாமி, கே.டி.கே.தங்கமணி மற்றும் இரா.செழியன் போன்ற அறிவார்ந்த மக்கள் பிரதிநிதிகள் தெற்கிலிருந்து டில்லி செல்லும் போது தெற்கில் முக்கியத்துவம் பற்றி இந்தியா உணரத் துவங்கியது.
நாடாளுமன்ற தொகுதி வரையறை
2021-2026ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளியிடும்பட்சத்தில் நாடாளுமன்றத் தொகுதிகள் குறித்த விமர்சனம் எழும் ஆனால் பல்வேறு காரணங்களைக்கூறி ஒன்றிய அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தள்ளிவைத்துக்கொண்டே வருகிறது.
2025-2026ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் கூட மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான எந்த பேச்சும் எழாததால் இவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பை தள்ளிவைத்துக்கொண்டே செல்ல முயல்கின்றனர் என்றும் இதன் பின்னால் ஏதோ ஒரு ஆபத்து உள்ளது என்றும் மக்கள் உணரத்துவங்கி விட்டனர்.
அதிக மக்கள் என்பது அதிக எம்.பி.க்களை குறிக்க வேண்டும். எளிய, சரியான தர்க்கம். ஆனால் எளிய, சரியான அரசியலா? இல்லை. மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதிகளின் வரையறை அல்லது மறுசீரமைப்பு, அரசமைப்பின் 82ஆவது பிரிவில் வகுக்கப்பட்டுள்ளபடி, மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அதிக எம்.பி.க்களை கொண்டிருக்கும்.
அதே நேரத்தில் குறிப்பாக கல்வியறிவில் சிறந்து விளங்கி மக்கள் தொகை கட்டுப்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொண்ட தென் மாநிலங்கள் குறைவான எம்.பி.க்களை கொண்டதாக அமையும். மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவின் அடிப்படையிலான எல்லை நிர்ணயம் ஏற்படுத்தும் முரண்பாட்டை உணர்ந்து, பிரதமர் இந்திரா காந்தி 1976இல் அரசியலமைப்பின் 42ஆவது திருத்தத்தின் மூலம் எல்லை நிர்ணய வரம்பை நிலைநிறுத்தினார்.
இது பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 84ஆவது திருத்தத்தின் மூலம் நீட்டிக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டு இந்த நீடிப்பு முடிவடைய உள்ளது. அதுதான் தற்போது பெரும் விமர்சனத்திற்கு இலக்காகி உள்ளது.
முன்னோக்கிச் செல்லும் வழி என்ன?
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு கருத்தில் கொண்டால், நமது மக்கள்தொகையில் (சுமார் 1.38 பில்லியன்) கிட்டத்தட்ட பாதி (48.6%) உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்காளம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களால் பங்களிக்கப்படுகிறது. 2011-2036க்கான சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய மக்கள்தொகை ஆணையத்தால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவால் செய்யப்பட்ட கணிப்புகளின்படி, இந்தியாவின் மக்கள்தொகையில் உத்தரப்பிரதேசத்தின் பங்கு 1.74 சதவீத (1971 இல் 15.30% இலிருந்து 2026இல் கணிக்கப்பட்ட 17.03%) அதிகரிக்கும். பீகாரின் பங்கு 1.59 சதவீத புள்ளிகள் (1971 இல் 7.69% இலிருந்து 2026 இல் கணிக்கப்பட்ட 9.28%) அதிகரிக்கும் மற்றும் ராஜஸ்தானின் பங்கு 1.17 சதவீத புள்ளிகள் (1971 இல் 4.70% இலிருந்து 2026 இல் கணிக்கப்பட்ட 5.87%) அதிகரிக்கும்.
இந்தியாவின் மக்கள்தொகையில் தமிழ்நாட்டின் பங்கு 2.08 சதவீத புள்ளிகள் (1971 இல் 7.52% இலிருந்து 2026 இல் கணிக்கப்பட்ட 5.44%) குறைவாகக் காணப்படும், பிரிக்கப்படாத ஆந்திராவின் பங்கு 1.46 சதவீத புள்ளிகள் (1971 இல் 7.94% இலிருந்து 2026 இல் கணிக்கப்பட்ட 6.48%) குறையும், மற்றும் கேரளாவின் பங்கு 1.36 சதவீத புள்ளிகள் (1971 இல் 3.89% இலிருந்து 2026 இல் கணிக்கப்பட்ட 2.54%) குறையும். சுவாரஸ்யமாக, மேற்கு வங்காளத்தின் பங்கும் 1.03 சதவீத புள்ளிகள் (1971 இல் 8.08% இலிருந்து 2026 இல் கணிக்கப்பட்ட 7.05%) குறையும்.
மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் குறைக்கப்படுதல் மற்றும் மக்கள்தொகையை கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்குதல் என்பது உரிமைகளைப் பறிக்கும் நிகழ்வாக மாறிவிடும். எல்லை நிர்ணய நடவடிக்கையால் மாநில உரிமைகள் உணர்வுகள் பாதிக்கப்படும் என்பதைப் புரிந்து கொள்ள பெரிய அரசியல் நிபுணத்துவம் தேவையில்லை.
கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அரசியலில் ஒற்றைக் கலாச்சாரச் சிந்தனையும் மிகவும் பிற்போக்குசிந்தனை கொண்ட வலதுசாரி ஆதரவு அரசு அமைந்துவிட்டது இந்த அரசு மாநில உரிமைகளை பறித்துக்கொண்டே வருகிறது. வலதுசாரி அமைப்பான இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். நாட்டில் மாநிலங்கள் தேவையில்லை. தலைமை ஒன்றே அதுவும் ஒன்றியத்தின் உள்ள அரசு மட்டுமே போதுமானது என்று தங்களின் கொள்கை முழக்கமாகவே கொண்டுள்ளது
ஆகவே தான் அந்த அமைப்பின் 100 ஆண்டு நிறைவின் போது அதன் துவக்ககாலக் கொள்கைகளை மெல்ல மெல்ல திணிக்கும் வகையில் அதிகாரத்தில் உள்ளவர்கள் மூலம் செயல்படுத்திகொண்டே வருகிறது. அந்த அபத்தமான கொள்கைகளில் ஒன்று தான் தொகுதி சீரமைப்பு. நமக்கு முன் இரண்டு வழிகள் உள்ளன: ஒன்று, மீண்டும் நாடாளுமன்ற தொகுதி வரையறையை அடுத்துவரும் 50ஆண்டுகளுக்கு தள்ளிவைக்கவேண்டும் அல்லது அனைத்து மாநிலங்களும் மக்கள்தொகை சமநிலையை எட்டும் வரையாவது இது குறித்து பேசக்கூடாது.
இரண்டாவது, அய்ரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பு நாடுகளுக்கு இடையே சமமான பிரதிநிதிகளை உருவாக்குவது போன்ற மாதிரியை இங்கேயும் கொண்டுவர புதிய வியூகத்தை வகுக்கலாம் அதாவது இந்திய சூழலுக்கு ஏற்ப இரண்டாவது திட்டம் என்பது நீண்ட கால ஆலோசனைகள் அதன் பிறகான முடிவுகள் என இழுத்துகொண்டே போகும் என்பதால் இந்தியாவின் அனைத்து மாநில மக்கள்தொகை- சமமாக உருவாகும் வரை அதாவது தென் மாநிலங்களைப் போன்று பொறுப்புணர்வுடன் நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் இதற்கான திட்டத்தை தான் தற்போது ஒன்றிய அரசு முதன்மையாக கருத்தில் கொள்ளவேண்டும். இப்போதைக்கு சாமானியர்களின் வார்த்தையில் சொல்லப் போனால் நாடாளுமன்ற எல்லை விரிவாக்கம் தொகுதிகள் சீரமைப்பு என்பது தேவையில்லாத ஆணி ஆகும்.
(மேற்கு வங்கத்தின் மேனாள் ஆளுநரான கோபால கிருஷ்ணகாந்தி எழுதிய ‘Delimitation fallout needs no political forecasting’ என்ற கட்டுரையின் தமிழாக்கம் – May 19, 2022 –‘The Hindu’)