கொல்கத்தா, பிப்.28 மேற்கு வங்காளத்தில் போலி வாக்காளர்களை நீக்கவிட்டால் தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு காலவரையற்ற போராட்டம் நடத்துவோம் என்று மம்தா எச்சரித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணமுல் காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக மற்ற மாநிலங்களிலிருந்து போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த விஷயத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் தேர்தல் ஆணையத்தின் அலுவலகம் முன் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்.தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு செலுத்தவே தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை பாஜக நியமித்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது. 2006-இல் நிலம் கையகப்படுத்துதல் எதிர்ப்பு இயக்கத்தின் போது நான் 26 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி இருக்கிறேன். அப்படிப்பட்ட என்னால், தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் ஒரு போராட்டத்தை தொடங்க முடியும் என்றார் அவர்.