சென்னை, பிப்.28, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய கல்வித் தொகையைத் தர மறுத்து, தேசியக் கல்விக் கொள்கையையும் ஹிந்தி மொழியையும் திணிக்க முனையும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, ஒன்றிய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தார், சென்னை அய்.அய்.டி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திராவிட மாணவர் கழகம் (DSF) உள்ளிட்ட மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (FSO-TN) சார்பில் இன்று (28.2.2025) காலை 10 மணியளவில் நடத்திய கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.
தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், திமுக மாணவரணி மாநில செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில், திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த பல்வேறு மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் திரளாக பங்கேற்றனர். திராவிட மாணவர் கழகம் சார்பில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சுரேஷ், மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன், திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர் செ.பெ.தொண்டறம், வடசென்னை மாவட்ட மாணவர் கழக தலைவர் ச.சஞ்சய், சட்டக் கல்லூரி மாணவர் பூவரசன், விஷ்வா, காசி வினோத், காசி விகாஷ், கோகுல், ராஜேஷ் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் திரளாக பங்கேற்று கருப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.