சென்னை, பிப். 25- தந்தை பெரியார் குறித்து அவதூறாகவும் மிக இழிவாகவும் பேசியதால் தம் மீது 53 காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனுத் தாக்கல் செய்துள்ளார். தம்மை அரசியல் ரீதியாக துன்புறுத்தவே 53 வழக்குகளை பதிவு செய்துள்ளதாகவும் சீமான் தமது மனுவில் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் குறித்து அண்மைக்காலமாக மிக இழிவாக அவதூறாக பேசி வருகிறார்.
தந்தை பெரியார், தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என பேசினார்; திருக்குறளை தங்க தட்டில் வைத்த மலம் என்றார்; பெண்களின் கர்ப்பப் பைகளை அகற்ற சொன்னார்; திருமணமான பெண்கள், விரும்பிய ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என பிரசாரம் செய்தார்; தமிழ்ச் சமூகத்தை சீர்திருத்துவதாக சொல்லி தமிழ்ச் சமூகத்தை சீரழித்தவர்தான் பெரியார் என்பது சீமானின் விமர்சனம்.
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கூறியதாலேயே பெரியாரை எதிர்த்து பேசுவதாகவும் சீமான் கூறினார். அத்துடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, தந்தை பெரியாரின் தொண்டர்கள் மீது பிரபாகரன் கொடுத்து அனுப்பிய வெடிகுண்டுகளை வீசுவேன் எனவும் கொலை மிரட்டல் விடுத்தார் சீமான்.
சீமானை கைது செய்யக் கோரி
சீமானின் இந்த இழிவான பேச்சுகளுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மதுரையின் சீமானின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு முழுவதும் காவல் நிலையங்களில் சீமானை கைது செய்யக் கோரியும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் எனவும் பெரியார் இயக்க தொண்டர்கள் புகார் மனு கொடுத்தனர்.
இந்த புகார் மனுக்களின் அடிப்படையில் சீமானை விசாரணைக்கு ஆஜராக பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து அழைப்பாணை அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த சம்மன்களை ஏற்று சீமான் ஆஜராகாத நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீடு மற்றும் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்று காவல்துறையினர் அழைப்பாணை வழங்கி உள்ளனர்.
இந்த பின்னணியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தந்தை பெரியார் குறித்து பேசியதற்காக தமிழ்நாடு முழுவதும் 53 காவல் நிலையங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன; இந்த வழக்குகளில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. பெரியார் குறித்து அவதூறாக பேசவே இல்லை; பெரியார் எழுதியதையும் பேசியதையும்தான் நான் பொது மேடைகளில் குறிப்பிட்டேன். என்னை அரசியல் ரீதியாக துன்புறுத்துவதற்காகவே நீதிமன்றங் களுக்கு அலையவிடுவதற்காக இந்த வழக்குகள் தொடரப்பட்டன.
ஆகையால் இந்த 53 வழக்குகளை யும் ஒருங்கிணைத்து ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று சீமான் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் காவல்நிலையங்களில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தம்மை கட்டாயப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் சீமான் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். சீமானின் இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.