திருச்சி,பிப்.25- திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வாகனங்களுக் கான நிறுத்தக் கட்டண வசூல் மய்யத்தில் பணியாற்றும் வட மாநிலத்தினர், ‘தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியாது’ என்று சொல்லி அடாவடியில் ஈடுபடுகின்றனர்.
இதனால், வாகனம் நிறுத்துபவர்களுக்கும், கட்டண வசூல் மய்யத்தில் இருப்பவர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடக்கிறது.
தமிழ்நாட்டில், சென்னைக்கு அடுத்து, இரண்டாவது பெரிய பன்னாட்டு விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் உள்ளது.
3 ஆயிரம் பயணியர்
சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை, உள்ளிட்ட 14 நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தினமும், 3,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்லும் திருச்சி பன்னாட்டு விமான நிலைய வளாகத்தில், கார் நிறுத்தம் மற்றும் அதற்கான கட்டண வசூல் மய்யம் உள்ளது.
சில நாட்களுக்கு முன், திருச்சிக்கு விமானத்தில் வந்த உறவினரை அழைத்துச் செல்ல வந்த ஒருவர், நிறுத்தப் பகுதியில் காரை நிறுத்தி விட்டு, அதற்கான கட்டணத்தை மய்யத்தில் செலுத்தியுள்ளார்.
உறவினர் வந்ததும் காரை நிறுத்தப் பகுதியில் இருந்து வெளியே எடுத்து வந்து, வருகை பகுதியில் நிறுத்தி விட்டு, உறவினரை வரவேற்க சென்றுள்ளார்.
திரும்பி வந்து பார்த்த போது, கட்டண வசூல் மய்யத்தில் இருந்தவர்கள், காரை பூட்டி இருந்தனர்.
அங்கிருந்தவர்களிடம் கேட்டதற்கு, கூடுதல் நேரம் காரை நிறுத்தியதால், 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும், என்றுதெரிவித்துள்ளனர்.
ஹிந்தி மட்டுமே தெரியும்
அபராத தொகையை செலுத்திய கார் உரிமை யாளர், விளக்கம் கேட்டதற்கு, ‘தமிழ், ஆங்கிலம் எதுவும் தெரியாது’ என்று கூறி, ஹிந்தியில் பேசியதோடு, கார் சாவியை திரும்ப ஒப்படைக்காமல் அடாவடியில் ஈடுபட் டுள்ளார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வாகன நிறுத்த கட்டண வசூல் மய்யத்தில், தமிழ், ஆங்கிலம் மொழிகள் தெரியாது என்று கூறுபவரை பணியமர்த்தியது குறித்து, விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பதாக கூறிய போதிலும், கட்டண வசூல் மய்யத்தில் இருந்தவர்கள் பொருட்படுத்தவில்லை.