வழக்குரைஞர்கள் சட்டத் திருத்த வரைவு மசோதா 2025அய் திரும்ப பெற வலியுறுத்தி வரும் 26ஆம் தேதி முதல் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

viduthalai
1 Min Read

திருச்சி,பிப்.24- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் பொதுக்குழு கூட்டம், திருச்சி தனியார் ஓட்டலில் நேற்று முன்தினம் (22.2.2025) நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

வழக்குரைஞர்கள் சட்டத்திருத்த வரைவு மசோதா-2025-அய் ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வரும் பிப்.26 முதல் மார்ச் 1 வரை வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணியில் இருந்து புறக்கணிப்பது என்றும், ஜனநாயக விரோத சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பபெற வேண்டும் என்று கோரியும், வெளிநாட்டு சட்ட நிறுவனங்களையோ வழக்குரைஞர்களையோ இந்தியாவில் எவ்வகையிலும் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி பிப்.26 அன்று அனைத்து நீதிமன்ற வாயில் முன்பாக கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
வழக்குரைஞர்கள் சட்ட திருத்த வரைவிலுள்ள ஆட்சேபங்களை பிப்.28க்குள் தெரிவிக்க வேண்டும் என்று குறைந்த நாட்கள் அவகாசம் கொடுத்து சட்டத்தை அவசரகதியில் நிறைவேற்ற ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது.

ஒன்றிய அரசு இதை கைவிட்டு வழக்குரைஞர்களின் கோரிக்கையை ஏற்று, மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வரும்

பிப்.28 அன்று அனைத்து நீதிமன்ற வாயில் முன்பாக பட்டினிப் போர் நடத்தப்படும்.
இந்த கோரிக்கை குறித்து பார் கவுன்சில் ஆப் இந்தியா சேர்மன் மன்னன் குமார் மிஸ்ராவையும் நேரில் சந்திப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இந்த கோரிக்கைகள் தொடர்பாக ஜாக் பொதுக்குழு அறிவித்துள்ள அனைத்து போராட்டங்களுக்கும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களும், அமைப்புகளும் மற்றும் வழக்குரைஞர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *