மொழியால் பெருமை கொண்ட இனம் தமிழினம் மொழியால் உருவான நாடு கிழக்கு வங்கம்
தாய்மொழியைக் காக்க உயிர்நீத்தவர்களின் நினைவாக இந்த உலக தாய்மொழிகளின் நாள் கொண்டாடப்படுகிறது உலகின் எல்லைகளை விரிவுபடுத்தவும், முடிசூட்டிக்கொள்ளவும், அதிகாரத்தைப் பிடிக்கவும் பல போர்கள், உயிர்ப்பலிகள் நடந்துள்ளன. ஆனால் மொழிக்காக நடந்த போரில் உயிரைக் கொடுத்தவர்கள் தமிழர்கள் தான். ஹிந்தி மொழித்திணிப்பு எதிர்கால தமிழ்நாட்டை நாசப்படுத்திவிடும் அதுமட்டுமல்லாமல் பல்லாயிரம் ஆண்டு பெருமை மிக்க தமிழ்மொழியை அழித்துவிடும் என்ற ஆபத்தை உணர்ந்து தந்தை பெரியார் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் துவக்கினார். முதல் பலி தாளமுத்து, நடராஜன் என்னும் மொழிப்போர்வீரர்கள், அது பலியல்ல விதையாக விழுந்தவர்கள் தாளமுத்து, நடராஜன், அந்த விதைகளில் இருந்து எழுந்த பல மொழிப்போர் வீரர்களால் இன்று தமிழ்மொழி காக்கப்படுகிறது
மொழி ஆதிக்கத்தின் தாக்கம் எவ்வளவு மோசமானது என்பதற்கு எடுத்துக்காட்டாக பாகிஸ்தான் பிரிவினையைக் கூறலாம். 1947 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் பிரிந்தது. பாகிஸ்தானின் பெரும் பகுதி மேற்கே இன்றைய பாகிஸ்தான், கிழக்கே இன்றைய வங்கதேசம் இரண்டுமே பாகிஸ்தானின் ஆளுமையின் கீழ் இருந்தது. ஆட்சிமொழியாக உருது இருந்ததால் 90 விழுக்காடு வங்கமொழி பேசும் கிழக்கு பாகிஸ்தான் மக்களிடையே உருதுவைக் கட்டாயமாக்கினர்
இந்த நிலையில் 1952-ஆம் ஆண்டு இதே நாளில் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி மாணவர்கள் கிளர்ந்தெழுந்தனர் அப்போது நடத்தப்பட்ட அடக்குமுறையின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.
யுனெஸ்கோ நிறுவனத்தால் 1999, பிப்ரவரி 21 பொது மாநாட்டின் 30-ஆவது அமர்வில் மொழிக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவாக இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெஸ்கோ அறிவித்தது.
2000-ஆம் ஆண்டு முதல் இந்த நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 2013-ஆம் ஆண்டில் அனைத்துலகத் தாய்மொழி நாளை ஒட்டி யுனெஸ்கோ பாரிசில் “தாய்மொழிகளும் நூல்களும் – மின்னணு நூல்களும் பாடநூல்களும்” (“Mother tongues and books – including digital books and textbooks”) என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
அந்த வகையில் இன்று உலக முழுவதும் உலகத் தாய்மொழி நாள் (International Mother Language Day) கொண்டாடப்பட்டு வருகிறது.