புதுடெல்லி, பிப்.20 மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல், வழக்கு விசாரணை ஒன்றுக்காக கடந்தாண்டு ஜூலை மாதம் உத்தர பிரதேசம் சுல்தான்பூர் செல்லும் வழியில் காலணி தைக்கும் தொழிலாளி ராம்சேத் என்பவரை சந்தித்து அவரது தொழில் குறித்து விசாரித்தார்.
அவரது விருப்பப்படி ராம்சேத், அவரது மகன், பேரன், மகள், மருமகன் ஆகியோரை ராகுல் டில்லி வீட்டுக்கு வரவழைத்தார். சோனியா, பிரியங்கா காந்தியும் அவர்களை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு குறித்து ராம்சேத் கூறியதாவது: எனது தொழிலை விரிவுபடுத்த ராகுல் உதவியுள்ளார். எனது குடும்பத்தினருக்கு சில அறிவுரைகள் வழங்கினார். எனது மகன் டில்லியில் ஷூக்கள் தைப்பதற்கான பயிற்சி பெறவும் அவர் ஏற்பாடு செய்துள்ளார். இதன் மூலம் ஷூக்களை ஏற்றுமதி செய்யமுடியும். ராகுல், பிரியங்கா, சோனியா காந்தி ஆகியோருக்கு நாங்கள் காலணிகளை பரிசாக அளித்து வாழ்த்துப் பெற்றோம். இவ்வாறு ராம்சேத் கூறினார்.
தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவராகிறார்
மேனாள் நீதிபதி ராஜமாணிக்கம்
சென்னை, பிப்.20 தமிழ்நாடு லோக்ஆயுக்தா தலைவராக நீதித்துறை உறுப்பினராக இருந்த உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி பி.ராஜமாணிக்கத்தை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மனிதவள மேலாண்மை துறை செயலர் ஜி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டப்படி, லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை இந்த அமைப்பு விசாரிக்கும். ஒரு தலைவர், 2 நீதித்துறை உறுப்பினர்கள், நீதித்துறை சாரா 2 உறுப்பினர்கள் இந்த அமைப்பில் இருப்பார்கள். இதில், தலைவர் மற்றும் நீதித் துறை சாராத உறுப்பினர்கள் பணியிடம் காலியாக இருந்த நிலையில், தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.இதைத் தொடர்ந்து, தற்போது நீதித்துறை சார்ந்த உறுப்பினராக உள்ள சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி பி.ராஜமாணிக்கம், லோக் ஆயுக்தா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். காலியாக உள்ள நீதித் துறை சாரா உறுப்பினர்கள் இடங்களுக்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட நுகர்வோர் விவகாரங்கள் குறைதீர்வு ஆணையத்தின் தலைவர் வி.ராமராஜ், வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினர் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்பட்டுள்ளனர்.தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜமாணிக்கம் 2027 ஏப்ரல் 17-ஆம் தேதி வரை பதவியில் இருப்பார். புதிய உறுப்பினர்கள் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது – இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பார்கள் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.