உலகச் சந்தையை உலுக்கும்! 8 ஆயிரம் பார் தங்கம் லண்டனை விட்டு அமெரிக்கா பறந்தது

viduthalai
2 Min Read

வாசிங்டன்,பிப்.20- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரிகளை உலக நாடுகள் மீது விதிக்க அனைத்து விதமான பணிகளை துவங்கிய நிலையில் அடுத்த 45 நாட்களில் இந்த வரி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் லண்டன் தங்க லாக்கரில் இருந்து ‘டன்’ கணக்கில் தங்கம் அமெரிக்காவுக்கு சென்று வருகிறது. இந்த விஷயம் உலகச் சந்தைகளை உலுக்கி வருகின்றன.
டிரம்ப் அரசின் வரி விதிப்புகள் உலகளாவிய வர்த்தகப் போரைத் தூண்டும் என அச்சுறுத்தல் இருக்கும் வேளையில், தங்கத்தையும் இந்த வரி பாதித்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க ஏன் அமெரிக்க வங்கிகள், அமெரிக்க அரசு அமைப்புகள், அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் லண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு தங்கத்தை கொண்டு செல்கிறது என்று பில்லியன் டாலர் குழப்பமாக உள்ளது. இதற்கான விடையை தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.

உலகின் இரண்டாவது பெரிய தங்க வைப்பு மய்யமாக விளங்கும் பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் லாக்கரில் உள்ள தங்கத்தில் அமெரிக்காவின் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

பேங்க் ஆஃப் இங்கிலாந்து 252 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்புள்ள நூற்றுக்கணக்கான டன் தங்கத்தைக் கொண்டுள்ளது. அதில் கணிசமான பகுதி நியூயார்க்கிற்கு மாற்றப் படுகிறது.

கடந்த சில மாதங்களில் மட்டும் குறிப்பாக அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து சுமார் 8,000 தங்கக் கட்டிகள் நியூயார்க்கிற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இது BoE இன் மொத்த தங்க இருப்பில் சுமார் 2% ஆகும்.

இதேவேளையில் லண்டனை காட்டிலும் அமெரிக்காவில் தங்கம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதை பயன்படுத்திக் கொள்ளவே அமெரிக்க வங்கிகள் அதிகளவிலான தங்கத்தை லண்டனில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு மாற்றுவதாக கருத்து உள்ளது. ஆனால் உண்மை வேறு.

டொனால்ட் டிரம்ப்பின் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பில் அய்ரோப்பா விலிருந்து வரும் அனைத்து இறக்குமதிகளுக்கும் மொத்தமாக வரிகளை விதிப்பார் என பல தரப்பில் இருந்து தகவல் வந்துள்ளதை அடுத்து அமெரிக்க வங்கிகள் தங்கத்தை லண்டனில் இருந்து தங்கத்தை அமெரிக்க மண்ணுக்கு மாற்றியுள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள தகவல்படி கடந்த சில மாதத்தில் லண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டுவரப்பட்ட 8000 பார் தங்கத்தில் பெரும் பகுதியை JPMorgan மற்றும் HSBC ஆகியவை கொண்டு வந்துள்ளது.

அமெரிக்கா- அய்ரோப்பிய ஒன்றியம் வர்த்தக உறவுகள் குறித்த நிச்சயமற்ற தன்மை அதிகரிப்பதால், இந்த வங்கிகள் குறுகிய கால இழப்புகளை ஈடுசெய்ய தங்கத்தை கொண்டு செல்கின்றன.

இதேவேளையில் வரியை விதித்தால் பன்னாட்டு பொருளா தாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும், இதை சமாளிக்க தங்கம் கட்டாயம் வேண்டும், பங்குச் சந்தையில் ஏற்படும் இழப்பை பல ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த விலையில் வாங்கிய தங்கத்தை விற்று லாபத்தை பார்க்கும் திட்டத்துடனும் தங்கத்தை கொண்டு வந்திருக்கலாம்.

அமெரிக்க தேர்தல் நாளுக்குப் பிறகு அமெரிக்காவின் தங்க இருப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அமெரிக்கா இப்போது சுமார் 106 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தைக் கொண்டுள்ளது. இது நவம்பர் 5 ஆம் தேதி 50 பில்லியன் டாலராக இருந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *