போபால்,பிப்.19- ஜீவனாம்ச வழக்கு ஒன்றில் மத்தியப் பிரதேச நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது.. ஒரு மனைவி தனது கணவனை தவிர, வேறு ஒருவரிடம் காட்டும் அன்பும் பாசமும் உடல் ரீதியான உறவை உள்ளடக்கியதாக இல்லாவிட்டால் அது விபச்சாரமாக கருதப்படாது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, கணவன் தன்னை விவாகரத்து செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டு இளம்பெண், மத்தியப் பிரதேச நீதிமன்றத்தை நாடினார். இதுகுறித்து கணவன் தரப்பில் வாதாடும்போது, “திருமணம் முடிந்த 3 நாளில் இருவருக்கும் இடையே உடல்ரீதியாக எதுவும் நடக்கவில்லை. தேர்வு எழுதுவதாக பிறந்த வீட்டுக்கு சென்றவர் மீண்டும் சேர்ந்து வாழ மறுத்தார்” என்று வாதிடப்பட்டது.
உடலுறவு தவிர்ப்பது கொடுமையே
இந்த இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், “கணவருடன் உடலுணர்வு ரீதியாக சேர்ந்து வாழ மறுப்பது என்பதும் ஒரு வகையான கொடுமை தான்” எனக்கூறி இளைஞரின் விவாகரத்தை மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் உறுதிசெய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவானது பலரது கவனத்தையும் அப்போது பெற்றிருந்தது.
இந்நிலையில், மற்றொரு வழக்கில், உடல் ரீதியான உறவு இல்லாமல் ஒரு மனைவி தன்னுடைய கணவனை தவிர வேறு ஒருவரை காதலிப்பது, விபச்சாரமாக கருதப்படாது என்றும், விபச்சாரம் என்பது உடலுறவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மனைவி கேட்ட ஜீவனாம்சம்
அங்குள்ள ஒரு இணையர், நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருந்தனர்.. இதில், தனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார் மனைவி.. ஆனால், இதை எதிர்த்து கணவர் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த மனுவில், தன்னுடைய மனைவி வேறொரு நபரை காதலிப்பதால், அவருக்கு ஜீவனாம்சம் பெற உரிமை இல்லை… “மாதம் ரூ.8,000 ஊதியம் வாங்கும் ஒரு வார்டு பாயாக வேலை செய்து வருகிறேன். என்னுடைய மனைவி ஏற்கெனவே இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 24இன் கீழ் ரூ.4,000 பெற்று வருகிறார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125 இன் கீழ் கூடுதலாக ரூ.4,000 வழங்குவது மிகையானது” என்று வாதிட்டார்.
வேறு ஒருவரிடம் உறவு என்பது விபச்சாரம் இல்லை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.எஸ்.அலுவாலியா, “கணவரின் நிதி நெருக்கடி கோரிக்கை என்பது ஆதாரமற்றதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய ஜீவனாம்ச தீர்ப்பை நீதிமன்றம் உறுதி செய்கிறது.
ஒரு மனைவி தனது கணவனை தவிர, வேறு ஒருவரிடம் காட்டும் அன்பும் பாசமும் உடல் ரீதியான உறவை உள்ளடக்கியதாக இல்லாவிட்டால் அது விபச்சாரமாக கருதப்படாது. விபச்சாரம் என்பது உடலுறவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
நிதி நெருக்கடி
நிதி நெருக்கடியை காரணம் காட்டி, கணவர் சமர்ப்பித்த ஊதிய சான்றிதழ், அவர் பணிபுரிந்த மருத்துவமனை வழங்கிய சான்றிதழில், வழங்கப்பட்ட இடம் மற்றும் தேதி போன்ற முக்கியமான விவரங்கள் இல்லை. தன்னுடைய மனைவி அழகு நிலையம் நடத்துவதன் மூலம் வருமானம் ஈட்டுவதான கணவரின் கூற்றையும் நீதிமன்றம் நிராகரிக்கிறது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.