சென்னை, பிப்.16 செங்குந்தர் ஜாதியினர் தொடர்ந்த வழக்கில் ‘‘பள்ளி நுழைவு வாயிலில் ஜாதி பெயரை எழுதலாமா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயநீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
‘‘ஜாதிகள் இல்லாத சமத்துவ சமூகம் என்று மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு, பள்ளி நுழைவு வாயிலில் ஜாதி பெயரை எழுதலாமா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கம் தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஜாதி சங்கங்களை சட்டப்படி பதிவு செய்ய முடியுமா? நீதிபதிகள் கேள்வி
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், இந்த சங்கம், தங்களுடைய ஜாதியை மேம்படுத்த வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஜாதிதான் முக்கியம். அந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான் சங்கத்தில் உறுப்பினராக முடியும் என்று கூறினால், இதுபோன்ற ஜாதி சங்கத்தை தமிழ்நாடு சங்கங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.
இந்த நாட்டில் அனைவருக்கும் சங்கத்தை உருவாக்க உரிமை உள்ளது. ஆனால், ஜாதியை நிலை நிறுத்தும் நோக்கத்துடன், சாதியின் பெயரில் உரிய சட்டத்தின் கீழ் சங்கம் தொடங்க முடியுமா? என்று கேள்வி எழுகிறது. இந்த கேள்விக்கு விடை காண வேண்டியதுள்ளது. சங்கங்களின் சட்டத்தின்படி, அறிவியல் வளர்ச்சி மற்றும் சமுதாய தொண்டு செய்யும் நோக்கங்களுக்காக சங்கங்களின் சட்டத்தின்படி சங்கங்களை தொடங்கலாம்.
அரசியல் சட்டம் கூறுவது என்ன?
அதேநேரம், அரசமைப்புச் சட்டம் ஜாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது. அசோக்குமார் தாக்கூர் வழக்கிலும், உச்சநீதிமன்றம் அதைத்தான் வலியுறுத்துகிறது. எனவே, சங்க பதிவு சட்டங்களின்படி, ஜாதியின் பெயரில் சங்கங்கள் தொடங்க முடியுமா?
அதுமட்டுமல்ல, ஜாதி சங்கங்கள் பள்ளி, கல்லூரி என்று கல்வி நிலையங்களை நடத்துகின்றன. அந்த கல்வி நிறுவனங்களின் நுழைவு வாயிலில் பள்ளி, கல்லூரிகளின் பெயரை எழுதி, இதை இந்த ஜாதி சங்கம் நடத்துகின்றது என்றும் எழுதி வைக்கின்றனர். அதாவது பள்ளிக்கூடத்துக்குள், ஜாதி இல்லையடி பாப்பா என்று மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுகிறார்கள். ஆனால், பள்ளியின் நுழைவு வாயிலில் ஜாதி பெயர் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலை என்ன? என்பதை அட்வகேட் ஜெனரல் வருகிற 19-ஆம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.