கும்பமேளாவின் பயன் மக்கள் உயிரைப் பறிப்பதுதானா?

Viduthalai
3 Min Read

முற்றிலும் முடங்கிப் போன ரயில்வே நிர்வாகம்

புதுடில்லி, பிப்.16 உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் நேற்று (15.2.2025) இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தலைநகர் டில்லியில் உள்ள புதுடில்லி ரயில் நிலையத்தில் ரயிலில் பயணிக்க வேண்டி திரண்ட காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் புதுடில்லி ரயில் நிலையத்தின் நடைமேடை 13 மற்றும் 14-இல் நடந்தது. உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதை டில்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி உறுதி செய்துள்ளார். பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரயாக்ராஜுக்குச் செல்லும் இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் 13 மற்றும் 14-ஆவது நடைமேடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என டில்லி தீயணைப்பு துறையின் தலைவர் அதுல் கார்க் கூறியுள்ளார்.

டில்லி ரயில் நிலையத்தில்
“டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட அனைவருக் கும் அதிகாரிகள் உதவி செய்து வருகின் றனர்” என பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் எல்என்ஜேபி மருத்துவமனைக்கு டில்லி ஆளுநர் வி.கே.சக்சேனா மற்றும் காபந்து முதலமைச்சர் ஆதிஷி நேரில் வந்து பார்த்தனர்.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட நடை மேடை எண் 13 மற்றும் 14-இல் நடை மேடையில் மக்கள் தங்களது உடைமை களை விட்டுச் சென்றது அப்படியே இருக்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளனர். ட்ராலி, தண்ணீர் பாட்டில், காலணி போன்றவை அங்கும் இங்கும் சிதறிக் கிடந்தன.

நடந்தது என்ன?
நேற்று (15.2.2025) இரவு சுமார் 10 மணி அளவில் மகா கும்பமேளாவுக்கான ரயிலை பிடிக்க அதிகளவில் மக்கள் புதுடில்லி ரயில் நிலைய நடைமேடை 13 மற்றும் 14-இல் திரண்டனர். அதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் பயணிகளும் பீதி அடைந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக அதில் சிக்கியவர்களுக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்துக்கு ரயில்வே காவல் துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அங்குள்ள சூழலை கருத்தில் கொண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும் விரைந்தன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேர் நடைமேடையில் கூடியது தான் கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 1,500 முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகள் விற்பனையானதும், ஸ்வதந்த்ரதா சேனானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஷ்வர் ராஜ்தானி ஆகிய ரயில்கள் தாமதமாக வந்ததும் இதற்கு காரணம் என ரயில்வே காவல்துறை துணை ஆணையர் கே.பி.எஸ் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட பிறகு புதுடில்லி ரயில் நிலையத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்துள்ளதாகவும், இது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளவும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய பிஜேபி அரசின் திமிர்வாதம்
தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கிடையாதாம்
ஒன்றிய அமைச்சர் திட்டவட்டம்
வாரணாசி, பிப்.16 ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்றால் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க முடியாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சமக்ரா ஷிக்ஷா அபியான் என்ற ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த நிதியை ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. பலமுறை தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து கோரிக்கை வைத்து ஒன்றிய அரசு அதனை ஏற்கவில்லை.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று (15.2.2025) ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை விடுவிக்க முடியாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *