மும்மொழிக் கொள்கையை ஏற்க வற்புறுத்தினால் மற்றொரு மொழிப்போர் 42 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்யாதீர் ஒன்றிய அமைச்சருக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி

Viduthalai
2 Min Read

திருச்சி, பிப்.16 உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் நேற்று (15.2.2025) காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச் சியில் பங்கேற்ற ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்க முடியாது’ என்று தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் நேற்று (15.2.2025) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம், தர்மேந்திர பிரதான் பேட்டி குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் கூறிய தாவது: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி. நாங்கள் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறோம். ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. தயவு செய்து கல்வியில் நீங்கள் அரசியல் செய்யாதீர்கள். இதில் தமிழ்நாட்டின் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது. 32 ஆயிரத்துக்கும் மேற் பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கு நாங்கள் ஊதியம் வழங்க வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டு மண்ணின் உணர்வு
ஒரு மாதத்திற்கு ரூ.76 கோடி மதிப் பிலும், ஒரு ஆண்டுக்கு ரூ.912 கோடி மதிப்பிலும் அவர்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறோம். அய்சிடி மூலமாக பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டு வருவது, 25 சதவீத குழந்தைகள் தனியார் பள்ளியில் கல்வி பயில செய்வதற்காக என அரசு வழங்கும் தொகை மட்டும் ரூ.400 கோடியை தாண்டும். இதை ஒன்றிய அரசும், மாநில அரசும் 60சதவீத, 40 சதவீத என ஏற்கிறது. இதை நாம் கூறினால், ஏன் மும்மொழி கொள்கையை நீங்கள் ஏற்றுக்கொண்டால் என்ன? எனக்கேட்கின்றனர். தமிழ்நாட்டு மண்ணின் உணர்வு தனிப்பட்டது.

இரு மொழிக் கொள்கை
மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்வதில் என்ன உங்களுக்கு பிடிவாதம் எனக்கேட்கின்றனர். அது நமக்கு தேவையில்லாத ஒன்று என்பதால் தான் அறிஞர் அண்ணா காலத்தில் இருந்தே இருமொழி கொள்கையை நாம் பின்பற்றி வருகிறோம். கல்வி என்பதை எடுத்துக்கொண்டோமானால் அவர்கள் கூறும் சமக்ரசிக்ஷா அபியான் என்ற திட்டத்தில் கூறப்படும் புறநிலை கூறுகளில் கேரளா 20க்கு 20 இடங்களை பிடித்து முதல் இடத்திலும், தமிழ்நாடு 19 இடங்களையும் பிடித்துள்ளது. 8 இடங்கள் பெற்றுள்ள குஜராத், 3 இடங்கள் மட்டுமே பெற்றுள்ள உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் வெறும் 2 இடங்கள் மட்டுமே பிடித்துள்ள பீகார் ஆகிய மாநிலங்களுக்கெல்லாம் உங்கள் நிதியை வழங்கியுள்ளீர்கள்.

மொழிப் போர்
மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக்கூறுவது, மற்றொரு மொழிப்போருக்கு வழி வகுக்கும் என்பதை நான் பகிரங்கமாக கூறிக்கொள்கிறேன். எனவே இதில் காலம் தாழ்த்தாமல், ஏதோதோ சாக்கு போக்கு கூறாமல் எங்களுக்கு வரவேண்டிய 2 ஆயிரத்து 152 கோடியை உடன் விடுவிக்க வேண்டும். அவர்களின் திட்டத்தை ஏற்காவிட்டால் நிதியளிக்க சட்டத்தில் இடம் இல்லை என்பதை ஏற்க முடியாது. 2018ஆம் ஆண்டு முதல் எஸ்எஸ்ஏ என்ற இந்த நிதி வழங்கப்பட்டு வருகிறது. இப்போது 2023க்கு மட்டும் தர மறுப்பதும், சட்டம் குறித்து பேசுவதும் சரியல்ல. இந்த சட்டம் முன்னர் எங்கே சென்றது இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *