திருச்சி, பிப். 15- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் “ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இளைஞர்களின் பங்கு” என்னும் மய்யக் கருத்தை கொண்டு 12.02.2025 முதல் 18.02.2025 வரை பாச்சூர் – கடுக்காத்துரை கிராமத்தில் தொடர்ந்து ஒரு வார காலம் நடைபெறுகிறது.
இச்சிறப்பு முகாமின் துவக்க விழா பாச்சூர் – கடுக்காத் துரை கிராமத்திலுள்ள தந்தை பெரியார் இல்லத்தில் 12.02.2025 அன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. அ.ஜெசிமா பேகம் வரவேற்புரையாற்றினார். பாச்சூர் மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயசித்ரா நடராஜன் மற்றும் மேனாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருமதி தனலட்சுமி கண்ணன் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில் மற்றும் ஒன்றியத் தலைவர் கு. போ. பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி, மண்ணச்சநல்லூர் நகரத் தலைவர் முத்துசாமி, நகர செயலாளர் க. பாலசந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
திராவிடர் கழக மாவட்ட காப்பாளர் ப.ஆல்பர்ட், மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் ச. இராசேந்திரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பாலசுப்ரமணியன், கடுக்காத்துரை தி.மு.க. கிளை செயலாளர் மாரியப்பன், உலகநாதன், மாவட்டத் துணைத் தலைவர் க. ஆசைத்தம்பி, மாரியப்பன், பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர்கள், பணியாளர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர் ரா. தினேஷ் நன்றியுரையாற்றினார்.
தொடர்ந்து ஒருவாரகாலம் மக்களை அச்சுறுத்தும் பல்வேறு நோய்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகள், சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய விளக்கங்கள், யோகா, தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள், பொது மருத்துவ முகாம், புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம், மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு சமுதாயப் பயனுள்ள நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.