1. மாஜி நீதிபதியும், அறநிலையப் பாதுகாப்புக் கழகத் தலைவரும், மக்கள் பொதுநலத்திற்குழைத்த பெரியாருமாகிய சர்.டி.சதாசிவ அய்யரவர்கள் காலஞ் சென்றமைக்குறித்து இம்மகாநாடு அனுதாபத்தைத் தெரிவிக்கிறது.
2. (அ) இந்துக்கள் என்று சொல்லப்படுகிறவர் களுக்குள் ஒரு வகுப்பாரை “சூத்திரர்கள்” என்று சொல்வது மிகவும் கொடுமையாயும், அக்கிரமமாயும் இருக்கிறபடியால் அவ்வகையான வார்த்தையை யாரும் எந்தச் சமயத்திலும் உபயோகப்படுத்தக் கூடாதென்று இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.
(ஆ) அரசியல் சட்ட புத்தகங்களிலும், வேறு பல ஆதாரங்களிலும் “சூத்திரர்” என்ற வார்த்தை இருக்கக் கூடாதென்பதோடு சூத்திரருக்கு வேறு நீதி, பார்ப்பனருக்கு வேறு நீதி என்பதாக ஒரு வகுப்புக்கு ஒரு நீதி என்றுள்ள சட்டங்களையெல்லாம் மாற்றவேண்டுமென்று தீர்மானிக்கிறது.
(இ) சென்னை அரசாங்க இலாகா முதன் மந்திரி சமீபத்தில் சட்டசபையில் காட்டிய ஒரு ஆதாரத்தில் “சூத்திரன்” என்கிற பதத்தை உபயோகித்திருப்பதைக் குறித்து இம்மகாநாடு வருந்துகிறதுடன் அதனை உடனே மாற்றவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது.
ரயில் நிலையங்களில் பாகுபாடு ஏன்?
3. புகைவண்டி நிலையங்களில் இந்து மக்களுக் கென்று ஏற்படுத்தப்பட்டிருக்கிற உண்டிச் சாலைகளில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்று பாகுபாடு செய்திருப்பதானது, பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதைக்கு மிக்கதொரு அவமானத்தை விளைவிப்பதால், அவ்வகையான வேற்றுமையை ஒழிக்கும்படி புகைவண்டி அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறது.
ரயில்வேக்காரர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற உண்டிச்சாலைகளில் பார்ப்பனர்கள் மாத்திரமே சமையல் செய்கிறவர்களாயிருந்து வருகிற வழக்கத்தை மாற்றி விடுமாறு ரயில்வே அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறது.
சங்கராச்சாரி மடத்து சிறீமுகம்
பொட்டுக் கட்டுவதை ஒழிக்க வேண்டும் என்று சிறீமதி முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் கொண்டுவரப்பட்ட மசோதாவானது இந்து மதத்திற்கு விரோத மென்றும் அதை இந்துக்கள் நிறைவேற்ற விடக் கூடாது என்றும் சிறீ சங்கராச் சாரியார் மடத்தில் தீர்மானம் செய்து சிஷ்ய கோடிகளுக்கு வினியோகிக்கப்பட்டு இருக்கின்றதாம். இந்த மாதிரியான இந்து மதத்தின் பெருமையைக் கமிஷனுக்குத் தெரிவிக்க வேண்டாமா?
– குடிஅரசு – 12.02.1928
4 முனிசிபல் எல்லைக்குள்ளிருக்கிற ஒவ்வொரு உண்டி, சிற்றுண்டிச் சாலைகளுக்கும், அந்தந்த முனிசிபல் சேர்மெனவர்களால் கொடுக்கப்படுகிற லைசென்ஸ் உத்திரவில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்று பேதப்படுத்தி இடங்களை வேறு வேறாகப் பிரித்து இருக்கக்கூடாதென்று நிபந்தனை ஏற்படுத்துவதுடன், முந்தி கொடுக்கப்பட்டுள்ள உத்தரவுகளிலும் மேலே கண்டபடி திருத்திக்கொடுக்க வேண்டுமாய் ஒவ்வொரு முனிசிபல் சேர்மெனவர்களை இம்மகாநாடு கேட்டுக் கொள்கிறது.
5. வருணாசிரமம் என்று சொல்வது மனித சமுகத்திற்கே பொருத்தமற்றதும், குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்களைப் பிரித்து வைத்துக் கொடுமைப் படுத்துவதற்கு உபயோகப்படுவதாயிருக்கிறபடியால், எந்த அர்த்தத்திலும் நாம் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாதென்றும், வர்ணாசிரமத்தை ஆதாரமாகக் கொண்ட மனுதர்ம சாஸ்திரம் முதலிய ஆதாரங்களை அடியோடு ஒழித்துவிடவேண்டுமாய் இம்மகா நாடு முடிவு செய்கிறது.
6. மகாத்மா காந்தி தென்னாட்டு சுற்றுப் பிரயாணத்தில் தமிழ் மக்களுக்கு வர்ணாசிரமத்தைப் பற்றி சொற்பொழிவு செய்ததையும், விரிவுரை செய்ததையும் ஒப்புக்கொள்ளாததோடு, “சூத்திரன்” என்ற வார்த்தையை உபயோகித்ததையும் உரமாய்க் கண்டிக்கிறது.
7. இந்து சமுகத்திற்குச் சம்பந்தப்பட்டதென்று சொல்லப்படுகிற கோயில், குளம், சத்திரம் முதலிய எல்லா விடங்களிலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களென்று சொல்லப்படுகிற எல்லா மக்களுக்காவது சம உரிமை கொடுக்கப்படவேண்டு மென்று இம்மகாநாடு முடிவுசெய்கிறது.
கடவுளை வழிபட இடைத் தரகர் ஏன்?
8. கோயில்களில் கடவுளை வழிபடுகிறதற்கு இடையில் தரகர்கள் வேண்டிய தில்லையென்றும், ஒவ்வொருவருக்கும், நேராகவே கடவுளை வந்தனை, வழிபாடு செய்து, பூசனை புரிவதற்கு உரிமையுண்டென்றும், அதனை இது முதலே ஒவ் வொருவரும் நடவடிக்கைக்குக் கொண்டு வர வேண்டுமென்றும் இம்மகாநாடு முடிவு செய்கிறது.
9. எந்த இலாகாவின் அதிகாரிகளும், தமக்குக் கீழ்ப்பட்ட உத்தியோகஸ் தர்களுக்கு நியமன சம்பந்தமாய் சிபார்சு செய்தல் கூடாதென்று தன்னுடைய கவர்ன்மெண்டு உத்தரவு பிறந்த பிறகும், நீதி இலாகாவின் தலைவர் சர்.சி.பி.ராம சாமி அய்யர் சென்னை மாகாண உயர்தர நீதிமன்ற வெள்ளைய ஜட்ஜ் ஒருவருக்கு தனக்கு வேண்டிய ஒரு பார்ப்பனரை முன்சீப் ஜாப்தாவில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கடித மனுப்பியதை இம்மகாநாடு கண்டிப்பதோடுகூட சென்னை சட்டசபை பார்ப்பனரல்லாத அங்கத்தினர்களை அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை ஏகமனதாய் நடத்தும்படி இம்மகாநாடு கேட்டுக்கொள்ளுகிறது.
பெண்களுக்கு உரிமை வேண்டும்
10. இந்துக் குடும்பங்களில் கணவர் இறந்த பிறகு மறுமணம் செய்து கொள்ள விருப்பமில்லாத பெண்மக்களுக்கு, தங்கள் கணவர் பயன்படுத்தி வந்த சொத்துக்களின் உரிமை கொடுக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்கிறது.
11. இந்து சமுகம் என்று சொல்லப்படும் குடும்பச் சொத்துகளில் பெண் மக்களுக்கும், ஆண்மக்களுக்கும் ஒத்த சொத்துரிமை கொடுக்கப்பட வேண்டு மென்று முடிவு செய்கிறது.
12. நாட்டில் ஜாதி மத வேற்றுமைகளிருந்து வரும் வரை ஒவ்வொரு ஜாதி, மதத்தினருக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டுமென்று இம்மகாநாடு கேட்டுக்கொள்ளுகிறது.
13. பார்ப்பனரல்லாதாரின் ஆதிக்கத்தில் இருக்கிற இலாகாக்களில் உள்ள சகல உத்தியோகங்களிலும், 100-க்கு 90 வீதம் பார்ப்பனரல்லாதாரையே நியமனமும் செய்யும்படி இம்மகாநாடு அவ்விலாகாக்களின் தலைவர்களைக் கேட்டுக் கொள்கிறது.
14. கல்வியிலாகாக்களில் உபாத்தியாயர்களும், உத்தியோகஸ்தர்களும் பெரும்பாலும் பார்ப்பனர்களாயிருப்பதால், அதாவது பார்ப்பனர்களின் கொள்கைப்படிக்கே பார்ப்பனரல்லாத மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாயிருக்கிறது. அவ்விதம் தடைபடாமலிருப்பதற்கு பார்ப்பனரல்லாத வர்களை 100-க்கு 90-க்குக் குறையாமலிருக்கும்படி உத்தியோகஸ்தர்களையும், உபாத்தியாயர்களையும் நியமனம் செய்ய வேண்டுமென்றும், டீச்சர்ஸ் டிரெயினிங் ஸ்கூல்களில் 100-க்கு 90-வீதம் பார்ப்பனரல்லாதாரையே அவசியம் சேர்த்துக் கொள்ளவேணுமாயும் அந்தந்த இலாகா அதிகாரிகளை இம்மகாநாடு கேட்டுக் கொள்கிறது.
சுயமரியாதைச் சங்கங்கள் ஏற்படுத்துவீர்!
15. இந்த ஜில்லாவின் ஒவ்வொரு தாலுகாவிலும், ஒவ்வொரு பெரிய ஊரிலும் சுயமரியாதைச் சங்கங்கள் ஏற்படுத்த வேண்டுமென்று இம்மகாநாடு கேட்டுக் கொள்ளுகிறது.
16. பார்ப்பனரல்லாத மக்களுக்கு நேரான முறையில் பகிரங்கமாய் சுயமரியாதை உணர்ச்சியை வளர்த்து வரும் ‘ஜஸ்டிஸ்’ ‘திராவிடன்’ ‘குடி அரசு’ ‘குமரன்’ முதலிய பத்திரிகைகளை கட்டாயமாய் ஒவ்வொருவரும் ஆதரிக்க வேண்டு மென்று இம்மகாநாடு வேண்டிக்கொள்கிறது.
17. அரசாங்க வைத்தியசாலைகளில் பார்ப்பனர் களுக்குத் தனி வார்டுகள் ஒதுக்கி வைப்பதை பலமாய்க் கண்டிக்கிறது.
18. வைக்கம் வீரரான உயர் திரு. ஈ.வெ.ராமசாமி நாயக்கரவர்கள் பார்ப் பனரல்லாத சமுகத்தார் தங்களில் சுயமரியாதையைக் காக்க கண்ணைத் திறந்து விட்டு, எல்லா வழிகளிலும் அவர்களில் சமுதாய நிலையை உயர்த்த பெரும் பாடுபட்டு வருவதைப் பாராட்டி நன்றி செலுத்துகின்றது.
மகளிருக்கு பொட்டுக்
கட்டுதலை நிறுத்துக!
19. சென்னை கார்ப்பொரேஷனில் சமீபத்தில் நடந்த தேர்தலில், பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார் ஒருவரும் தலைவராக வரக்கூடாதென்று செய்த சூழ்ச்சிகள் அனைத்தும் பார்ப்பனரல்லாத மக்களுக்கு நன்றாய் விளங்கிவிட்டபடியால் பார்ப்பனரல்லாதார் ஒவ்வொருவரும் தங்களுடைய ஓட்டுரிமைகளை எந்த ஸ்தாபனங்களிலும் பார்ப்பனரல்லாதவர்களுக்கே கொடுத்துத் தேர்ந்தெடுக்கும்படி இம்மகாநாடு வேண்டிக் கொள்கிறது.
20. கடவுள் பெயராலும், மதத்தின் பெயராலும் பெண்களுக்குக் கோயில்களில் பொட்டுக்கட்டி, பொதுமகளிராக்குவது இந்து சமுகத்திற்கே பெரிய அவதூறும், அவமானமும் உண்டுபண்ணுவதால் அவ்வகையான வழக்கத்தை நிறுத்த வேண்டுமென்று இம்மகாநாடு முடிவு செய்கிறது. இது சம்பந்தமாய் டாக்டர் திருமதி முத்துலட்சுமி அம்மாளவர்கள் செய்து வரும் முயற்சியை இம்மகாநாடு பாராட்டுகின்றது.
இம்முயற்சிக்குக் கேடு கருதிவரும் திரு. சத்தியமூர்த்தி கூட்டத்தார் அறியாமை யினாலும் தன் நலங்கருதியும் செய்துவரும் எதிர்ப் பேச்சுகளை இம்மகாநாடு மிகவும் உரமாய்க் கண்டிக்கிறது.
21. கிராமங்களில் அதிகமான பள்ளிக்கூடங்களும், சித்த மருத்துவச் சாலைகளும் ஏற்படுத்த வேண்டுமென்றும், ஆதிதிராவிடக் குழந்தை களுக்குப் பள்ளிக்கூடங்களில் சம்பளம் ரத்து செய்யப்படவேண்டுமென்றும் அரசினரை இம்மகாநாடு கேட்டுக்கொள்கின்றது.
22. சென்னை அரசினரால் தமிழ் அறிவியல் நூற்கள் எழுதிப் பாடமாக்க ஏற்பாடு நடைபெறு கின்றதில், அறிவியற் சொற்களெல்லாம் இது காறும் வடமொழி உருவாக அமைக்கப்பட்டு வந்திருப்பதை இம்மகாநாடு கண்டிக்கிறதோடு, அறிவியற் சொற்களையெல்லாம் தூய தனித்தமிழ் மொழியிலேயே அமைக்க வேண்டுமென்றும், தமிழில் அமைக்கக்கூடாத இடங்களில் மட்டும் பிற மொழிகளில் அமைக்கலாமென்றும் சென்னை கல்வி இலாகா மந்திரியவர்களுக்கு இம்மகாநாடு தெரிவிக்கிறது.
23. பார்ப்பனரல்லாத கூட்டத்தாருள் சடங்குகளில் நம்பிக்கை இருக்கிறவர்கள், பிறவியில் உயர்வு – தாழ்வு என்கிற வேற்றுமையில்லாத பெரியவர்களைக் கொண்டு தமது சடங்குகளை தமிழ்மொழியில் நடத்திக்கொள்ள வேண்டுமென்று இம்மகாநாடு முடிவு செய்கிறது.
24. நாட்டில் சுயமரியாதையையும், பொருளா தாரத்தையும் கருதி ஒவ்வொரு வரும் கதரை ஆதரிக்க வேண்டுமென்று இம்மகாநாடு வேண்டிக்கொள்கிறது.
25. பார்ப்பனரல்லாதார் பொருள் எத்துறைகளிலும் பார்ப்பனரல்லாதாரையே அடையுமாறு ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரையும் செய்யும்படி இம்மகாநாடு வேண்டுகிறது.
26. சுயமரியாதைக்காக தமிழ் நாட்டில் செய்யப்படும் சத்தியாக்கிரகத்திற்கு இம்மகாநாடு முழு ஆதரவு கொடுக்கத் தயாராக இருக்கிறதாகத் தெரிகிறது?
27. கல்பாத்தி பார்ப்பனர்கள் வசிக்கும் பார்ப்பனச் சேரியில் வெகுகாலமாய் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் நடக்கக்கூடாதென்றும், பார்ப்பனர்கள் செய்து வந்த கொடுமை நீங்கி எல்லா மக்களும் அவ்வீதி வழி நடக்கத்தகுந்த வெற்றி கிடைத் தமைக்கு இம்மகாநாடு சந்தோஷத்தை அறிவிக்கிறதுடன் அதுவே நமது சுயமரியாதை இயக்கத்திற்கு ஓர் வெற்றிக்குறியென்றும் கருதுகின்றது.
பச்சையப்பன் கலாசாலை
டிரஸ்டிகளுக்கு நன்றி!
28. சென்னை பச்சையப்பன் கலாசாலை டிரஸ்டிகள் ஆதிதிராவிடர்களை இந்துக்கள் என்று ஒப்புக்கொண்டதோடு அவர்களையும் பள்ளியிற் சேர்த்துக் கொண்டமைக்கு இம்மகாநாடு மகிழ்கின்றது.
அதற்கு மாறாக நின்ற, திரு வெங்கடேச சாஸ்திரலு என்ற பார்ப்பனரைக் கண்டிக்கிறதோடு, அக்கூட்டத்தாரை இனி டிரஸ்டிகளாக நியமிக்கக் கூடாதென்றும் பொது ஜனங்களைக் கேட்டுக் கொள்ளுகிறது.
மேலும், சமுக ஒற்றுமையையும், நியாயத்தையும் கருதி, பச்சையப்பன் கலாசாலையில் கிறிஸ்துவ மாணவர்களையும், மகமதிய மாணவர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறது.
29. இம்மகாநாடு, சென்னை மணலி விடுதி சொந்தக்காரர்களைப் பார்ப்பன ரல்லாதாருக்கு அதிகமான இடங்கள் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறது.
30. திருவையாறு வடமொழிக் கலாசாலைக்காக, தஞ்சை ஜில்லாபோர்டார் செலவு செய்து வரும் தொகையில் ஒரு பகுதியை மீதிவைத்து ஆதி திராவிடர்கள் பொதுக் கல்வி அபிவிருத்திக்காக செலவிடவேண்டுமென்று இம்மகாநாடு மேற்படி போர்டாரைக் கேட்டுக்கொள்கிறது.
31. ராயல் கமிஷன் என்பதை பகிஷ்காரம் செய்யவேண்டுமென்கிற அரசியல் கூட்டத்தாரில், நமது பார்ப்பனரல்லாதார் சேர்ந்து கொள்ளக் கூடாதென்று இம்மகாநாடு அபிப்பிராயப்படுகின்றது.
32. இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அமலுக்கு வர, சர்க்கார் சட்ட சம்பந்தமாக ஆகவேண்டிய காரியங்களுக்கு நமது சட்டசபைப் பிரதிநிதிகள் வேண்டிய முயற்சி எடுத்துக்கொண்டு, அவைகளை நிறைவேற்றி வைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றது.
– குடிஅரசு – தீர்மானங்கள் – 11.12.1927