வெளிநாட்டவர்களுடன் இந்தியர்களின் காதல் திருமணம் சட்டப்படி செல்லுமா? உயர்நீதிமன்றம் தீர்ப்பு

viduthalai
3 Min Read

சென்னை, பிப்.13-வெளி நாட்டவர்களுடன் இந்தியர்கள் செய்து கொள்ளும் காதல் திருமணம் சட்டப்படி செல்லுமா? என்பது குறித்து விளக்கம் அளித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

விருப்பம் இல்லை

ராஜா என்பவர் தன் திருமணத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தனக்கும், ராணி என்பவருக்கும் (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 2005ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவன். என் மனைவி இந்து மதத்தை சேர்ந்தவர். இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் திருமணம் செய்து கொண்டதாக என் மனைவி கூறினார்.

கிறிஸ்தவ முறை இல்லை

எங்கள் திருமணம் மனைவியின் வீட்டில் நடந்தது. கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடக்க வில்லை. எங்களது திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழும் பதிவு செய்யவில்லை. அதனால், எங்களது திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை ராணி மறுத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட மதுரை நீதிமன்றம், சிறப்பு திருமணம் சட்டத்தின் கீழ் பதிவு செய்யாததால், இவர்களது திருமணம் செல்லாது என்று கடந்த 2016ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில், ராணி மேல்முறையீடு செய்தார்.

சிறப்பு சட்டம்

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்எம்டி டீக்காராமன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:- திருமண பத்திரிகையை பார்க்கும் போது, அது கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது என்று தெரிய வில்லை. தேவாலயத்திலும் திருமணம் நடக்கவில்லை. கணவன் மனைவி இருவரும் வெவ்வேறு மதங்களையும் வெவ்வேறு மத நம்பிக்கைகளையும் கொண்டவர்கள். அவர்களது திருமணம் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவும் செய்யவில்லை. இருவேறு மதங்களை சேர்ந்தவர்கள் திருமணத்தை சிறப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்தால்தான் செல்லுபடியாகும்.

வேறு வழி இல்லை

ஏன் என்றால், இந்து திருமண சட்டத்தின் கீழ் கணவன், மனைவி இருவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் யாராவது ஒருவர் கிறிஸ்தவராக இருந்தால், கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து வைக்கும் அதிகாரி முன்புதான் திருமணம் நடைபெற வேண்டும். வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்றால், அதாவது இந்துவுடன் கிறிஸ்தவரோ அல்லது இஸ்லாமியரோ என்றால் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ்தான் பதிவு செய்ய வேண்டும்.

மனுதாரர்களின் திருமணம் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாததால், இவர்களது திருமணம் செல்லாது என்று தீர்ப்பை பிறப்பிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அதனால், இவர்களது திருமணம் செல்லாது என்று கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்கிறோம்.

வெளிநாட்டு காதல்

அதேநேரம், வெளி நாட்டவர்களை நம் நாட்டைச் சேர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வதை அடிக்கடி பத்திரிகைகளின் வாயிலாக பார்க்கிறோம். இந்திய நாட்டில் உள்ள திருமணச் சட்டத்தைத்தான் நாம் பின்பற்ற வேண்டும். இந்து திருமண சட்டத்தின்படி தம்பதி இருவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
இதுபோல வெளிநாட்டவரை திருமணம் செய்யும் போது, அவர்கள் இந்து மதத்தைச் சேராதவர்கள் என்றால், கண்டிப்பாக சிறப்பு திருமணச்

சட்டத்தின் கீழ் அவர்களது திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யவில்லை என்றால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Share This Article