சென்னை,பிப்.13- கடந்த 2018ஆம் ஆண்டு கஜா புயல், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைத் தாக்கியது. இதில் 63 பேர் பலியாகினர். 732 கால்நடைகள் பலியாகின. 88,000 ஹெக்டேர் பரப்பு நெற்பயிர்கள், வாழை, தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன. 56,942 குடிசை வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. 30,322 ஓட்டு வீடுகள் சேதமடைந்தன.
இதையடுத்து, கஜா புயலால் இடிந்த வீடுகள், பாதிக்கப்பட்ட பயிர்கள், தென்னை மரங்கள், கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி கலைச்செல்வன், வெள்ளைச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த
வழக்குகள், தலைமை நீதிபதி கே.ஆர்.சிறீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இழப்பீடு கிடைத்திருக்காவிட்டால் அரசுக்கு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், எவ்வளவு இழப்பீடு வழங்குவது என்பது குறித்து அரசு தான் சட்டப்படி முடிவெடுக்க வேண்டும். அரசு நியாயமான இழப்பீடு குறித்து முடிவெடுக்க வேண்டும் என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
சுடுமண் மூடி கைப்பிடி
வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுப்பு
விருதுநகர்,பிப்.13- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மே இறுதியில் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கும் நிலையில் இதுவரை 18 குழிகளில் 3,400க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. தற்போது அகழாய்வு நடைபெற்று வரும் 2 குழிகளில் சுடுமண் மூடியின் கைப்பிடி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், ‘‘முன்னோர்கள் உணவு பொருட்களை வைப்பதற்காக சுடுமண் கிண்ணம் பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது அதன் கைப்பிடி கிடைத்துள்ளது’’ என்றார்.