தமிழ்நாடு அரசின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு உடனடி அனுமதி தேவை ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

viduthalai
2 Min Read

புதுடில்லி, பிப். 13 தமிழ்நாடு அரசின் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு (12.02.2025), புதுடில்லியில், ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை சந்தித்து, தமிழ்நாடு அரசின் பல திட்டங்களுக்கு அனுமதி மற்றும் நிதி கோரி கோரிக்கை மனு அளித்தார்.

ஒன்றிய அமைச்சருக்கு நன்றி

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில், 1 லட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட தொழில்துறை கொட்டகைகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று அறிவிப்பை வெளியிட்டமைக்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்ததார். ஏப்ரல் 2025 – உடன் முடிவுக்கு வரவுள்ள, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் மற்றும் மாநில வல்லுநர் மதிப்பீட்டுக் குழு ஆகியவற்றின் மறுசீரமைப்புக்கான அரசின் முன்மொழிவின் மீது விரைந்து அறிவிக்கை வெளியிடுமாறும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டார்.

மதிப்பீட்டுக் குழு

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு விரைவான அனுமதி வழங்குவதற்கு ஏதுவாக ஒரு கூடுதல் மாநில வல்லுநர் மதிப்பீட்டுக் குழு அமைக்க ஏற்கெனவே அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு கருத்துருவை சமர்ப் பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த முன்மொழிவுக்கு விரைந்து அனு மதி வழங்குவதாக மத்திய மந்திரி உறுதி யளித்தார்.

கடல் அரிப்பைத் தடுக்கவே…

மேலும், இக்கலந்துரையாடலின் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர மற்றும் வன சுற்றுச்சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதற்கான பசுமைக் கவசத்தை உருவாக்குவதற்கான புதிய திட்டத்திற்கு காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல்திட்டம் மற்றும் பசுமை இந்தியா இயக்கம் ஆகியவற்றின் கீழ் ரூ.27.53 கோடிக்கு அனுமதி வழங்குமாறு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை அமைச்சகத்திடம் கோரப்பட்டது. இத்திட்டம் இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் மாவட்டத்தில் பல கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் இடையகப் பகுதியிலிருந்து, தெங்குமரஹாடா கிராமத்தில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கு தேவைப்படும் ரூ.74.4 கோடி ரூபாயை ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணைய நிதியிலிருந்து வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு கருத்துரு சமர்ப்பித்துள்ளது.

வனவிலங்குகளால் ஆபத்து

அந்தப் பகுதியில் புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், அடிக்கடி ஏற்படும் மனித வன விலங்கு மோதல்கள் உள்ளூர் சமூகத் தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளை விப்பதையும் கருத்தில் கொண்டு, இத்திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோரிக்கை மனுவில் சமர்ப்பிக்கப் பட்டுள்ள மாநில அரசின் முயற்சிகளுக்கு தனது அமைச்சகத்தின் ஆதரவை வழங்குவதாக ஒன்றிய அமைச்சர் உறுதியளித்தார். இந்நிகழ்வின்போது சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்சுப்ரியா சாகு உடனிருந்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *