11.2.2025 நாளிட்ட ‘தினமலரில்’ இப்படி ஒரு கடிதம் வெளி வந்துள்ளது.
ஆர்.நந்தன், விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: திராவிட கழகத்தினர் கருப்பு சட்டையை, சீருடை போல் அணிவர்;
ஆனால், வேட்டி மட்டும் வெள்ளையாக இருக்கும். அதுபோல தி.மு.கழகத்தினர் கருப்பு – சிவப்பு பார்டர் போட்ட வேட்டியையும், அ.தி.மு.க.,வினர் கருப்பு – -வெள்ளை- – சிவப்பு பார்டர் போட்ட வேட்டியையும், கம்யூனிஸ்ட்கள் செந்நிற சட்டையையும் அணிந்து, பவனி வருவது வழக்கம்.
இவர்கள் வேட்டி அணிந்தால் என்ன, அணியாவிட்டால் என்ன, நம்மை வம்புக்கு இழுக்காமல் இருந்தால் சரி என்ற, ‘ரீதியில்’ பொதுமக்கள் எவரும் அவர்கள் உடை அலங்காரம் குறித்து விமர்சனமோ, கேலியோ செய்வதில்லை.
அதேபோன்று, மாட்டுக்கறி உணவு விவகாரத்தில், ‘என் உணவு; என் உரிமை’ என்று முழங்கிய போது, ‘அவர்கள் உடம்பு; அவர்கள் உரிமை’ என்று எவரும் கண்டுகொள்ளவில்லை.
ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன், அந்த கட்டுப்பாட்டை மீறி, திருவள்ளுவர் அணியும் உடை குறித்து விமர்சித்து, ஆட்சேபம் எழுப்பி, வெகுண்டெழுந்துள்ளார்.
ஈரோட்டில் அளித்த பேட்டி ஒன்றில், ‘கவர்னர் தினமும் வள்ளுவர் சிலைக்கு காவி ஆடை அணிவிக்கிறார்; பின், மரியாதை செலுத்துகிறார்; அது எதற்கு எனப் புரியவில்லை. பிரச்சினையை ஏற்படுத்தி கலகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார்’ என்று கூறியுள்ளார்.
கவர்னர், வள்ளுவர் சிலைக்கு காவி உடை அணி வித்தால் என்ன, வெள்ளை ஆடை அணிவித்தால் என்ன, இல்லை ஆரஞ்சு நிற உடை அணிவித்தால் தான் என்ன?
ராஜ்பவனில் இருக்கும் வள்ளுவருக்கு தானே, காவி உடை அணிவித்து அழகு பார்த்தார்… முத்தரசன் வீட்டுக்குள் நுழைந்து, பிரச்சினை செய்யவில்லையே?
பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்பது கவர்னரின் நோக்கம்போல் தெரியவில்லை; முத்தரசனின் எண்ணமாக அல்லவா தெரிகிறது?’’
‘தினமலர்’ 11.2.2025
தினமலரின் குறுக்கு வெட்டுப் புத்தி எந்த யோக்கியதையில் இருக்கிறது – அவர்களின் விவாத முறைகள் எந்த அளவு முட்டாள்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறது என்பதை இதன் மூலம் நன்கு அறியலாம்.
கட்சிகள் உடை அணியும் நிறமும், ஆளுநர் திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவிப்பதும் ஒன்றா? தோழர் முத்தரசன் அவர்களின் கேள்விக்குள் அடங்கியிருக்கும் நியாயமும், நேர்மையும் இதுதான்.
தமிழ்நாடு அரசு அதிகாரப் பூர்வமாக திருவள்ளுவர் உருவத்தை வெளியிட்டுள்ளது. ஆர்.என். இரவி என்பவர் தமிழ்நாட்டின் ஆளுநர் – தமிழ்நாடு அரசின் வரிப்பணித்திலிருந்து சம்பளம் பெற்றுக் ெகாண்டு இருப்பவர்.
அப்படி இருக்கும் போது ஓர் அரசு அதிகாரப் பூர்வமாக வெளியிட்ட திருவள்ளுவர் உருவத்திற்குத் தன் விருப்பம் போல வண்ணத்தைப் பூச முடியாது. ஆளுநர் மாளிகை என்பதும் ஆர்.என். இரவியின் சொந்த இடம் அல்ல; அரசுக்கு உடைமையானது. அப்படி இருக்கும்போது ஆளுநர் மாளிகையில் தானே காவி உடை அணிந்த வள்ளுவரை வைத்து அழகு பார்த்தார் என்று சொல்லுவது ‘தினமலரின்’ அசல் பார்ப்பனத்தனத்தையும், போக்கிரித்தனத்தையும் தான் வெளிப்படுத்துகிறது.
ஆளுநர் ஆர்.என். இரவியின் ஒவ்வொரு நடவடிக்கையும், ஆர்.எஸ். எைஸச் சார்ந்ததாகவே இருக்கிறது என்பது ஊரறிந்த குற்றச்சாட்டு.
அதை மேலும் உறுதிப்படுத்துவதுதான் ஆர்.எஸ்.எஸின் காவி வண்ணத்தை வள்ளுவர் மீதும் திணிப்பதாகும்.
ஒன்றிய அரசின் அதிகாரப் பூர்வமான முத்திரை சின்னத்திற்கு ஒருவர் தன் விருப்பத்திற்கேற்ப வண்ணம் தீட்ட முடியுமா? புத்த சக்கரத்திற்குப் பதிலாக ஆர்.எஸ்.எஸின் ஸ்வஸ்திக் கொடி வடிவத்தைத் திணிக்க முடியுமா?
அதே போன்றுதான் ஒரு மாநில அரசு அதிகாரப் பூர்வமாக வெளியிட்ட திருவள்ளுவர் படத்திற்கு ஆளுநர் தன் விருப்பத்திற்கேற்ப வண்ணம் பூசுவதாகும்.
தமிழ் மக்களின் உணர்வை தேவையில்லாமல் சீண்டுவது ஆளுநருக்கழகல்ல; தினமலர்கள் வக்காலத்து வாங்குவது அதன் பூணூல் புத்தியாகும்!