காலாவதியான மருந்தை விற்றால், மருந்துக் கடைக்காரரிடம் சண்டை போடுவோம்; புகார் செய்வோம்!

Viduthalai
9 Min Read

காலாவதியான மருந்துக்கு சண்டை போடுகிறவர்கள்; காலாவதியான கருத்துகளை வைத்துக்கொண்டு இன்றைக்கு
நாடு முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கிறார்களே, இது என்ன நியாயம்?
பெரியார் நூலக வாசகர் வட்ட சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுப்பியவினா!

சென்னை, பிப்.13 காலாவதியான மருந்தை விற்றால், மருந்துக் கடைக்காரரிடம் சண்டை போடுவோம்; புகார் செய்வோம். இது பகுத்தறிவு. காலாவதியான மருந்துக்கு இவ்வளவு சண்டை போடுகிறவர்கள்; காலாவதியான கருத்துகளை வைத்துக்கொண்டு இன்றைக்கு நாடு முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கிறார்களே, இது என்ன நியாயம்? என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘அறிவியல் மனப்பாங்கும் –
நாட்டின் முன்னேற்றமும்’’
சிறப்புக் கூட்டம்!
கடந்த 6.2.2025 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில், ‘‘அறிவியல் மனப்பாங்கும் – நாட்டின் முன்னேற்றமும்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
படிப்பது வேறு; பகுத்தறிவு வேறு. எனவே, பகுத்தறி வைப் பயன்படுத்தி சிந்திப்பதும், பயனுறுவதும்தான் அறிவியல் மனப்பான்மையாகும்.
கேள்வி கேட்பதையே ஓர் இயக்கமாக்கியதுதான் சுயமரியாதை இயக்கம்!
கேள்வி கேள் என்றார்.
கேள்வி கேட்பதையே ஓர் இயக்கமாக்கியதுதான் சுயமரியாதை இயக்கம் – பெரியாருடைய இயக்கம்.
எல்லா கூட்டங்களிலும் கேள்வி செசன்ஸ் உண்டு. யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்பார்கள். 1930 இல் ஒருமுறை சிதம்பரத்தில், விடாமல் ஒருவர் பெரியாரிடம் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார்.
தடியை எடுத்து நான் தட்டிக் காட்டுகிறேன், அது கல்லா, இல்லையா? பாருங்கள்!
ஒரு தீட்சதர் கேட்கிறார், ‘‘நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், எனக்கு ஒரே ஒரு கஷ்டம் என்ன வென்றால், கடவுளைப் போய் கல் என்று சொல்கி றீர்களே?” என்று.
உடனே அவரை அழைத்து, ‘‘வாங்க நேரே கோவி லுக்குள் செல்வோம்; தடியை எடுத்து நான் தட்டிக் காட்டு கிறேன், அது கல்லா, இல்லையா?’’ என்று சொல்கிறார் பெரியார்.
அதிர்ச்சி அடைந்த தீட்சதர், ‘‘நீங்கள் சொல்வது போன்று அது கல் என்றாலும், அது சாதாரண கல் இல்லீங்க; மந்திரத்தை ஜெபித்து அதைக் கடவுளாக்கி இருக்கிறார்களே?” என்று சொன்னார்.

உங்கள் மந்திரத்திற்கு
அவ்வளவு சக்தி இருக்கிறதா?
‘‘ஓ, அப்படியா? மந்திரத்திற்கு அவ்வளவு சக்தி இருக்கிறதா?” என்று பெரியார் கேட்டார்.
‘‘ஆமாங்க! மந்திரத்திற்கு அவ்வளவு சக்தி இருப்ப தால்தான், அந்தக் கல் கடவுள். எல்லா கல்களையும் நாங்கள் கும்பிடுவதில்லை; அந்தக் கல்லினுள் மந்திரம் உள்ளே போயிருக்கிறது’’ என்று அந்த தீட்சதர் சொன்னார்.
உடனே பெரியார் சொன்னார், ‘‘மிக்க மகிழ்ச்சி. மந்திரத்திற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது என்றால், கருவறையில் இருக்கின்ற மொட்டைப் பாறை கல்லுக்குள் சென்ற மந்திரத்தால், கடவுளாக்குகின்ற சக்தி இருக்கிறது என்றால், மிகவும் பாராட்டவேண்டியதுதான். ஆனால், அதே மந்திரத்தை, தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்று சொல்லி, ஒதுக்கி வைத்திருக்கிறீர்களே, தொடக்கூடாது என்று; அவர்கள்மேல் மந்திரத்தைவிட்டு, அவர்களை உயர்ஜாதிக்காரர்களாக ஆக்கியிருந்தால், எந்தப் பிரச்சினையும் இருக்காதே” என்றார்.
அந்தத் தீட்சதர் அமைதியாக அமர்ந்து விட்டார்.
ஆகவே, கேள்வி கேள் என்று சொன்னதுதான் இந்த இயக்கம்.
கேள்வி கேட்காதே, நம்பு என்று சொல்வதற்கும், கேள்வி கேள் என்ற இயக்கத்திற்கும் இடையேதான் இப்பொழுது பெரிய போராட்டம்.
கேள்வியே கேட்கக்கூடாது, நம்பு! நம்பு! நம்பு! என்று சொல்கிறார்கள்.
அறிவியல் மனப்பான்மையை நம்பியிருந்தால், இவையெல்லாம் வந்திருக்காது.
இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கூட்டத்தை ஒலி, ஒளிப்பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள்; உலகம் முழுவதும் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டும், கேட்டு க்கொண்டும் இருக்கிறார்கள்.

இது எப்படி முடிந்தது?
நோட்டீசின் கீழே ‘‘ஒலி பெருக்கி உண்டு’’ என்று போட்டிருப்பார்கள்!
முதலில், ஒலி பெருக்கி. 50 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய தலைவர்களின் கூட்டத்திற்கு மட்டும்தான் நோட்டீசு அச்சடித்துக் கொடுப்பார்கள். அந்த நோட்டீசின் கீழே ‘‘ஒலி பெருக்கி உண்டு” என்று போட்டிருப்பார்கள்.
இன்றைய காலகட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் ஒலி பெருக்கி உண்டு என்று போட்டிருந்தால், அதைப் பார்த்து நீங்கள் எல்லாம் சிரிப்பீர்கள். ஆனால், அன்றைக்கு இது பெரிய விஷயம். ஒலிபெருக்கி உண்டு என்றால், பெரிய சாதனை அது.
அந்த ஒலி பெருக்கியைப் பார்த்து ஆச்சரி யப்பட்டார்கள். ஆடியோ முதலில் வந்தது, பதிவாயிற்று. பிறகு ஆடியோ மட்டுமல்லாமல், காட்சிப் பதிவு செய்யவதற்காக வீடியோ வந்தாயிற்று.

இதை யார் கண்டுபிடித்தது?
முப்பத்து முக்கோடி தேவர்களில் யாராவது ஒருவர் கண்டுபிடித்ததா? அல்லது சத்யசாய்பாபா கையைத் தூக்கியதால், பொத்தென்று கீழே விழுந்ததா? என்றால் கிடையாது.
இது அறிவியலின் கண்டுபிடிப்பு.
ஆடியோ வரும்பொழுது, ஏன் வீடியோ வரக்கூடாது என்று கேள்வி எழுப்பியதன் விளைவுதான்.

நீதிமன்றத்திற்கு அக்னியை சாட்சியாகக்
கூப்பிட முடியுமா?
அக்னி சாட்சியாக, தேவர்கள் சாட்சியாக என்று மந்திரம் சொல்லி கல்யாணம் செய்து வைக்கிறார்கள் ஆன்மிக முறைப்படி. தகராறு ஆகி, நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள். அங்கே அக்னியை சாட்சியாகக் கூப்பிட முடியுமா? அப்படி கூப்பிட்டால் என்னாகும்? பயர் சர்வீசையும் சேர்த்துக் கூப்பிடவேண்டும் அல்லவா!
இப்பொழுது உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பே இருக்கிறது வீடியோ சாட்சி செல்லும் என்று.
இதை யார் கண்டுபிடித்தது? அறிவியல். அறிவியலில் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? கேள்வி கேட்டதினுடைய விளைவாகத்தான்.
அதனால்தான் ஒரு சமூக மாற்றம் ஏற்பட்டது. ஆனால், அதை இன்றைக்குத் தலைகீழாக மாற்றவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காகத்தான் இன்றைக்குப் போராட்டம் நடைபெறுகிறது.
அரசியல் களம் என்பதானாலும், ஸநாதனம் என்கிற பெயரில் வந்தாலும், இன்னொரு பெயரால் வந்தாலும் மிக முக்கியமாக தலைகீழாக ஆகவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிரமாணம் எடுக்கிறார்களே தவிர, அதனுடைய கருத்தையே தலைகீழாக மாற்றவேண்டும் என்று நினைக்கக்கூடிய அளவிற்கு இருக்கிறார்கள்.

பஞ்சகவ்வியம் என்றால் என்ன?
எந்த அளவிற்கு அந்தக் கொடுமை போயி ருக்கிறது என்றால், பஞ்சகவ்வியம் என்று சொல்வார்கள்; பஞ்சகவ்வியம் என்றால் என்ன? சந்திரமண்டலத்திலிருந்து எடுத்து வந்த மிக்சலா அது? அதுமட்டுமல்ல, நம்மை எவ்வளவு முட்டாளாக்கி யிருக்கிறான் பார்ப்பான் என்று அய்யா தான் சொல்வார். இது எவ்வளவு கொடுமை என்றால், மற்றவற்றில் எல்லாம் தெரியாமல் கலப்படம் செய்கிறார்கள். சாப்பிடும் உணவில்கூட யாருக்கும் தெரியாமல் கலப்படம் செய்கிறார்கள். ஆனால், இவன் அப்படியில்லை, எல்லாரையும் கூப்பிட்டு, ‘‘பைவ் புராடக்ட்ஸ் ஆஃப் தி கவ்” என்று பெருமையாகச் சொல்கிறான்.
வெளிநாட்டுக்காரர்கள் பஞ்சகவ்வியத்தைப் பார்த்து, ‘‘வாட் இஸ் திஸ்?’’ என்று கேட்டால், ‘‘தி இஸ் பைவ் புராடக்ட்ஸ் ஆஃப் தி கவ்” என்று சொல்வார்கள்.

அது என்ன என்று கேட்டால், மாட்டு மூத்திரம், மாட்டுச் சாணம், பால், தயிர், நெய் ஆகியவை கலந்தது என்று சொல்கிறார்கள். இவையெல்லாம் தனித்தனியாக இருப்பதை, ஒன்றாகச் சேர்த்து குழப்பி செய்கிறார்கள்.
பால், தயிர், நெய் என்று தனித்தனியாக இருப்பதை, எதற்கு எதைப் பயன்படுத்தவேண்டும் என்று தெரியாமல் செய்கிறார்கள்.
இவன் வீட்டு மாடு, அப்பொழுதுதான் அது மூத்திரம் பெய்து முடித்திருக்கும்; இவன் போய் பின்னால் நோண்டு கிறான்; அதற்குப் பிறகு அது மூத்திரம் பெய்யவேண்டும். புது வீட்டைக் கட்டி, ரிவர்ஸ் கியரில் கொண்டு வந்து உள்ளே விடுகிறார்கள்.
நல்ல வீட்டைக் கட்டி, கிரகப்பிரவேசம் என்ற பெயரில், உள்ளே பசு மாட்டை ஓட்டிக்கொண்டுவருவார்கள். அது புது வீட்டில் மூத்திரம் பெய்தால் நல்ல சகுனம். அது சாணி போட்டது என்றால், அதைவிட நல்ல சகுணம் என்பார்கள்.

‘‘கோமியம் குடித்தால்,
நோய் தீருமாம்!’’
பஞ்சகவ்யம் என்ற பெயரில் எல்லாவற்றையும் கலக்கிக் கொடுக்கிறான் என்றால், யாரோ ஒருவன், பிழைப்பிற்காக செய்து கொண்டிருந்த காலம் மாறி,
அய்.அய்.டி. இயக்குநராக இருக்கக்கூடிய ஒருவர், ‘‘கோமியம் குடித்தால், நோய் தீரும்’’ என்று சொல்கி றார்.
எந்தக் காலகட்டத்தில் தெரியுமா? மெடிக்கல் கோர்சில், செயற்கை நுண்ணறிவு வந்திருக்கின்ற காலகட்டத்தில்.
22 ஆம் நூற்றாண்டிற்குச் செல்வதற்குப் பதிலாக, 2 ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்கிறார்கள்!
ஒரு பக்கம் செயற்கை நுண்ணறிவு; இன்னொரு பக்கம் பார்த்தீர்களேயானால், யார் அதைச் சொல்லிக் கொடுக்க வேண்டுமோ, அவர்களே, 22 ஆம் நூற்றாண்டிற்குச் செல்வதற்குப் பதிலாக, 2 ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்கிறார்கள். இதுதான் இன்றைக்குப் பிரச்சினை.
யார்மீதும் நமக்குக் கோபமில்லை.
யார்மீதும் நமக்கு வெறுப்பில்லை.
யார்மீதும் நமக்கு துவேசம் இல்லை.
நீதிமன்றத்தில் தீர்ப்புச் சொல்லும் நீதிபதிகள் சிலர்கூட, ‘‘அது நம்பிக்கை; அந்த நம்பிக்கையைப் புண்படுத்தக்கூடாது” என்கிறார்கள்.

என்ன நம்பிக்கை?
தவறான ஒரு நம்பிக்கை அது.
உடல் நோய் தீர, டாக்டர் மருந்து எழுதிக் கொடுக்கிறார். மருந்துக் கடைக்குச் சென்று மருந்து வாங்கும்பொழுது, முதலில் என்ன செய்வோம்?
மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்துதானா? முதல் பார்வை இது.
இரண்டாவது, காலாவதி தேதி என்னவென்று பார்ப்போம்.
காலாவதியான மருந்தை விற்றால், மருந்து கடைக்கா ரரிடம் சண்டை போடுவோம்; புகார் செய்வோம். இது பகுத்தறிவு.
காலாவதியான கருத்துகளை இன்றைக்கு நாடு முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கிறார்களே!
காலாவதியான மருந்துக்கு இவ்வளவு சண்டை போடுகிறவர்கள்; காலாவதியான கருத்துகளை வைத்துக்கொண்டு இன்றைக்கு நாடு முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கிறார்களே, இது என்ன நியாயம்?
நாம் ஏதோ கற்பனையான விஷயங்களைச் சொல்லவில்லை.
இன்றைக்குக் காலையில் வெளிவந்திருக்கின்ற செய்தி.

நாடாளுமன்றத்தில் கண்டித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின!
அமெரிக்காவிற்கு முறையான விசாவில் செல்லாமல், குறுக்குவழியில் குஜராத், அரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலிருந்து அதிகமாகச் சென்றிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் கை, கால்களில் விலங்கு போட்டு வெளியேற்றி இருக்கிறார்கள். அந்தச் செய்தியை நாடா ளுமன்றத்தில் கண்டித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின.
இப்போது ஏழு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறார்கள். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது.

‘தினமலரில்’ வெளிவந்துள்ள செய்தி!
இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், இன்று காலை “தினமலர்” பத்திரிகையில் வெளிவந்த செய்தி.
‘‘அமெரிக்கா விசா விரைவாகக் கிடைக்க அனுமன் கோவிலில் குவியும் பக்தர்கள்” என்று தலைப்பட்டு வெளிவந்திருக்கிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், யாருக்கும் விசா கொடுக்கக்கூடாது என்று சொல்லிக் கொண்டி ருக்கின்றார். ஏற்கெனவே விசா இல்லாமல் அங்கே இருப்பவர்களையெல்லாம் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கின்றார்.
அறிவியல் மனப்பான்மை ஏன் தேவை?
நாட்டின் முன்னேற்றம் என்பது எப்படி இருக்கிறது? இந்த இரண்டிற்கும் தொடர்பான செய்தி இது.

படிக்கிறேன், கேளுங்கள்!
‘‘அமெரிக்க விசா விரைவாக கிடைக்க ஹனுமன் கோவிலில் குவியும் பக்தர்கள்!’’
‘‘ஆமதாபாத்: அமெரிக்காவுக்கு விசா கிடைக்கவேண்டும் என்று, ஆமதாபாத்தின் ஹனுமன் கோவிலில் வேண்டுதல் வைக்கும் மக்கள், தற்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு நல்ல புத்தி தரணும் என்றும் வேண்டிக்கொள்கின்றனர்.
குஜராத்தின் ஆமதாபாத்தில் அமைந்துள்ளது சமத்காரி ஹனுமன் கோவில். இந்தக் கோவி லின் விசேஷம், ஹனுமனை மனமுருகி வேண்டிக்கொண்டால், உடனடியாக விசா கிடைத்து விடும். குறிப்பாக அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்போர், இந்தக் கோவிலுக்கு வருவது சகஜம்.
சாதாரணமாக இந்தக் கோவிலில், தினமும், 1,000 பேர் வருகை தருவர். விசா ஹனுமன் என்று அழைக்கப்படும் சமத்காரி ஹனுமனை தரிசிக்க தற்போது அதிகளவில் மக்கள் வருகின்றனர்; குறிப்பாக இளைஞர்கள் வருகை அதிகம்.
அமெரிக்க அதிபராக, கடந்த மாதம், 20 ஆம் தேதி பதவியேற்றார் டொனால்டு டிரம்ப். உடனேயே, பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி யுள்ளோரை வெளியேற்றுவது, வேலை பார்க்க வருவோருக்கான விசாவை குறைப்பது போன்றவை அதில் அடங்கும்.
அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக வழங்கப்படும் எச்1பி விசாவை அதிகம் பெறும் நாடுகளில் நம் நாடு முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், டிரம்பின் அறிவிப்புகள், அமெரிக்க விசாவுக்காக காத்திருக்கும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
எந்தப் பிரச்சினையும் இல்லாமல் விசா கிடைக்க வேண்டும் என்று விசா ஹனுமனிடம் கோரிக்கை வைக்க ஆயிரக்கணக்கானோர் இந்தக் கோவிலுக்கு படை எடுத்து வருகின்றனர்.
தங்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் முடிவுகள் எடுக்க டொனால்டு டிரம்புக்கு நல்ல புத்தி தர வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கின்ற னர்.
இதுபோன்ற பல கோவில்கள் நாடு முழுதும் உள்ளன. வெளிநாடுகளுக்குச் செல்ல நினைப்போர், தங்களுடைய பிரார்த்தனை நிறைவேறுவதற்காக அங்கும் படை எடுத்து வருகின்றனர்.’’
அறிவியல் மனப்பான்மை எவ்வளவு தேவை என்பதை நினைததுப் பாருங்கள்.
(தொடரும்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *