வாஷிங்டன், பிப்.12 ஹமாஸ் வசம் உள்ள அனைத்து பயணக் கைதி களையும் 15ஆம் தேதிக்குள் விடுவிக்காவிட்டால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே 6 வார போர் நிறுத்தம் ஏற்பட்டு, ஹமாஸ் வசம் உள்ள 33 இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். இதுவரை 5 முறை விடுவிப்புகள் மூலம் 21 இஸ்ரேல் பணயக்கைதி களும், 730 பாலஸ்தீன சிறை கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அடுத்த பணயக் கைதிகள் விடுவிப்பு வரும் 15ம் தேதி நடக்க உள்ளது. இதற்கிடையே, காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ராணுவம் மீறி பாலஸ்தீனர்களை கொன்றதாகவும் மனிதாபி மான உதவிகளையும் தடுத்து நிறுத்துவதாகவும் குற்றம்சாட்டியது. இதனால் அடுத்தகட்ட பணயக் கைதிகள் விடுவிப்பு தாமதமாகும் என தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தம் ரத்து
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘வரும் சனிக்கிழமைக்குள் அனைத்து பணயக் கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் பயங்கர விளைவுகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். போர் நிறுத்தம் ரத்து செய்யப்படும். இது என்னுடைய முடிவு. இதில் இறுதி முடிவெடுக்க வேண்டியது இஸ்ரேல் தான். நான் சொல்வதற்கு உடன்பட வேண்டியது இஸ்ரேல் கையில் உள்ளது. காசா மக்களை எடுத்துக் கொள்ள ஜோர்டான், எகிப்துக்கு அழுத்தம் தரப்படும். இல்லாவிட்டால் அவர்களுக்கு தரும் அமெரிக்க நிதி உதவியை நிறுத்துவேன். காசாவை அமெரிக்கா கைப்பற்றி அதை ரியல் எஸ்டேட் மய்யமாக்குவேன்’’ என்றார்.
மக்கள் பீதி
இதனால், காசாவில் பாலஸ்தீன மக்கள் இடையே மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற மிரட்டல்களுக்கு எந்த மதிப்பும் இல்லை, அவை நிலைமையை மேலும் மோசமாக்கும் என ஹமாஸ் எச்சரித்துள்ளது. இந்த விஷயத்தில் டிரம்ப் புரிதல் இல்லாமல் ரியல் எஸ்டேட் வியாபாரி போல் பேசுவதாக ஹமாஸ் உயர்மட்ட அதிகாரி சமி அபு ஜூஹிரி குற்றம் சாட்டி உள்ளார்.