பெங்களூருவில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட திராவிடர் திருநாள் ‘பொங்கலோ பொங்கல்’

viduthalai
2 Min Read

பெங்களூரு, பிப். 12- கருநாடக மாநிலம் பெங்களூருவில் திராவிடர் திருநாள் ‘பொங்கலோ பொங்கல்’ எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
பெங்களூர் தமிழ்ச் சங்க வளாகம் திராவிடர் அகம் பெரியார் மய்யம், தமிழர் தலைவர் கி.வீரமணி அரங்கில் பிப்ரவரித் திங்கள் 9ஆம் நாள் காலை 10 மணிக்கு மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் மு.சானகிராமன் தலைமையில் நடைபெற்றது.

செயலாளர் இரா.முல்லைக்கோ அனைவரையும் வரவேற்று, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். கழகக் கொடியினை பொருளாளர் கு.செயக் கிருட்டிணன் பலத்த கரவொலிக்கிடையே உயர்த்தி வைத்தார். நிகழ்வுக்குகழகத் துணைத் தலைவர் வழக்குரைஞர் கே.குணவேந்தன் முன்னிலை வகித்தார்.

முதலாவதாக அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் ஒளிப் படத்தினை செம்மொழி மேனாள் இயக்குநர் இராமசாமி திறந்து வைத்தார். பெரியாரின் ஒளிப் படம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

முனைவர் பட்ட ஆய்வாளர் கருமலை கோ.மணிகண்டன் பொங்கல் விழா சங்க காலம் முதல் கொண்டாடப்பட்ட விவரம், மற்றும் தொண்டறச் செம்மல் தந்தை பெரியாரைப் பற்றி அரிய தக வல்களை ஆய்வியல் நோக்கில் விளக்கிப் பேசினார்.

நிறைவாக செம்மெழி மேனாள் இயக்குநர் இராமசாமி உடல் நலம் குன்றிய நிலையில் அமர்ந்த நிலையில் தந்தை பெரியாரைப் பற்றியும், செம்மொழி அங்கீகாரம் பெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞரின் அரிய செயல்பாடுகளையும், திறம்பட செயலாற்றிய பாங்கினையும் நெடிய நேரம் பேசி அனைவரையும் ஊக்கமூட்டி, மீண்டும் ஒருமுறை பெரியார் மய்யத்திற்கு வருகை தந்து கலந்துரையாடுவதாக பேசினார். செம்மொழி இராமசாமிக்கு பட்டாடை அணிவித்து மைசூர் ஜரிகை தலைப்பாகையை துணைத் தலைவர் கோகுண வேந்தன் அணிவித்து சிறப்பு செய்தார் கருமலை மணிகண்டன்.

பெரியாரிய அறிஞர் பொன்னம் பலனாரின் இல்லத்தார் தனித்தமிழ், தமிழ்க்கொடி, மகிழினி, சிவா, பெரியார் பிஞ்சு பொழில் நிலவு ஆகியோருக்கு பயனாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.

புதுவையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் உலகப் பாவலர் தமிழன்னைத் தமிழர் பேரவை சார்பில் திருவண்ணாமலை நிகழ்வில் கழக வழக்குரைஞர் பிரிவு மாநிலத் தலைவர் ஜெ.அருணுக்கு ‘தந்தை பெரியார் விருது’ மற்றும் கேடயமும் வழங்கப் பெற்றதை பாராட்டி, செம்மொழியார் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். அப்போது பலத்த கரவொலி அரங்கை அதிர வைத்தது. வழக்குரைஞர் ஜெ.அருண் நன்றி கூறினார். பொதுக்குழு உறுப்பினர் இரா.இராசாராம் அனைவருக்கும் வெண் பொங்கல், இனிப்பு பொங்கல் வழங்கி மகிழ்வூட்டினார். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *