ஆந்திராவில் பகுத்தறிவாளர் முதலாம் ஆண்டு நினைவு நாள்
தந்தை பெரியாரின் நூல்களால் ஈர்க்கப்பட்டவர் டாக்டர் ஜெயகோபால்
ஆந்திராவின் பகுத்தறிவுப் போராளியும், மனித உரிமை செயல்பாட்டாளருமான டாக்டர் ஜெய கோபாலின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள துவாரகா நகர் பொது நூலகத்தில் நடைபெற்றது
நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர்கள், சமூக ஆர்வலர்கள். மனித உரிமைசெயல்பாட்டளர்கள் கலந்துகொண்டனர்
வாழ்க்கையை அர்ப்பணித்தவர்
நிகழ்ச்சியில் உரையாற்றிய புகழ்பெற்ற கவிஞர் சி.வி.யின் மகன் உதய் பாஸ்கர், டாக்டர் ஜெய கோபால் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கும், பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்று கூறினார்
ஆந்திரா – தெலங்கானா முழுவதும் ஓயாத தமது பரப்புரைகளால், பகுத்தறிவு சிந்தனையை வளர்த்ததில் அவரின் பங்கினை எடுத்துரைத்தார்.
எழுத்தாளர்கள் அமைப்பின் தலைவரும், வட ஆந்திர பிரஜா சங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான பி.வி. ரமணமூர்த்தி, டாக்டர் ஜெய கோபாலின் வாழ்க்கைப் பயணத்தை நினைவு கூர்ந்தார், அவரது வாழ்க்கையில் தந்தைபெரியாரின் எழுத்துக்களின் குறிப்பிடத்தக்க தாக்கத்தை விளக்கிக் கூறினார். “அவரின் ஆரம்ப வாழ்க்கையில் கடுமையான எதிப்பு இருந்தபோதிலும், டாக்டர் ஜெய கோபால் மத வெறிக்கு எதிரான தனது போராட்டத்தில் உறுதியாக நின்றார்.
கேள்வி கேட்க வைத்தவர்
அவரது சொற்பொழிவுகளும், புத்தகங்களும் பலரை குருட்டு நம்பிக்கைகளை எதிர்த்துக் கேள்வி கேட்கவும், வகுப்புவாத சித்தாந்தங்களை நிராகரிக்கவும் தூண்டின,” என்று ரமணமூர்த்தி கூறினார். எதிர்கால தலைமுறையினரிடையே பகுத்தறிவு சிந்தனையை வளர்க்க டாக்டர் ஜெயகோபாலின் எழுத்துக்களை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
போலி என்கவுன்ட்டர்கள் வெளியானது
இந்திய நாத்திக சங்கத்தின் மாநில தலைவர் டி. சிறீராம் மூர்த்தி, 1972ஆம் ஆண்டு டாக்டர் ஜெய கோபாலின் தலைமையில் தொடங்கப்பட்ட அமைப்பின் வரலாற்றுப் பின்னணியை பகிர்ந்து கொண்டார். அவரது நாஸ்திக யுகம் மற்றும் தி ஏஜ் ஆஃப் ஏதீசம் ஆகிய இதழ்கள் மனித உரிமைகள் குறிப்பாக காவல்துறையினரின் போலி என்கவுன்ட்டர்கள் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளை மாநிலத்தில் முதன்முதலில் வெளிக்கொணர்ந்த முன்னோடி வெளியீடுகள் என்று அவர் குறிப்பிட்டார்.
‘‘மனித உரிமைகளுக்கான டாக்டர் ஜெயகோபாலின் பங்களிப்புகள் பரவலாக அங்கீகரிக்கப்பட்டன, மேலும் பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்புடனான அவரது தொடர்பு அவருக்கு உலகளாவிய புகழைப் பெற்றுத் தந்தது. மனித உரிமைத் தலைவராக அவரது பணியை அங்கீகரிக்கும் வகையில் அய்க்கிய நாடுகள் சபையில் அவரது நிழற்படம் வைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மாணவர்களிடையே விழிப்புணர்வு
தெலுங்கானா அறிவியல் மாணவர் கூட்ட மைப்பின் தலைவர் வேதாந்த் மவுர்யா, இளைஞர் களிடையே அறிவியல் மனப்பான்மை மற்றும் பகுத் தறிவுவாதத்திற்கான அவரது தளராத போராட்டத்தைப் பாராட்டி டாக்டர் ஜெய கோபாலுக்கு வீர வணக்கம் செலுத்தினார். பகுத்தறிவுச் சிந்தனையை ஊக்குவிப்பதில் டாக்டர் கோபாலின் முயற்சிகளையும், மாணவர் சமூகங்களில் அவர் ஏற்படுத்திய குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் மௌர்யா வலியுறுத்தினார்.
“மாற்றம் இளைய தலைமுறையிலிருந்து தொடங்கு கிறது என்று டாக்டர் ஜெய கோபால் எப்போதும் நம்பினார். அவர் மாணவர்களை அறிவியல் கண்ணோட்டத்தை கடைப்பிடிக்கவும், மூடநம்பிக்கைகளை கேள்வி கேட்கவும் ஊக்குவித்தார்,” என்று மவுர்யா கூறினார்.
பணியை முன்னெடுப்போம்
டாக்டர் ஜெய கோபாலின் மகள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்து, தன் தந்தை வலியுறுத்திய இலட்சியங்களையும், கொள்கைகளையும் பின்பற்றுமாறு அனைவரையும் வலியுறுத்தினார். “குருட்டு நம்பிக்கைகள் மற்றும் பாகுபாடுகள் அற்ற சமூகத்தை என் தந்தை நம்பினார். அவரது பணியை முன்னெடுத்துச் செல்வது நமது பொறுப்பு,” என்று அவர் கூறினார்.
தெலுங்கு மொழியில் தந்தை பெரியாரின் புத்தம்
இந்திய நாத்திக சங்கத்தின் தலைவர் சைனி நரேந்திரா, பகுத்தறிவு சிந்தனை மற்றும் மதச்சார்பற்ற மதிப்புகளை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகித்த மாத இதழான நாஸ்திக யுகத்தை விரைவில் மீண்டும் தொடங்குவதாக அறிவித்தார். டாக்டர் ஜெய கோபால் எழுதிய தந்ைத பெரியார் புத்தகத்தின் தெலுங்கு பதிப்பை வெளியிடுவதில் தான் முன்னர் ஆற்றிய பங்களிப்பை அவர் நினைவு கூர்ந்தார். இது வாசகர்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி, பிராந்தியத்தில் பகுத்தறிவு இயக்கத்தை வலுப்படுத்தியது. “நாஸ்திக யுகத்தை ‘‘மீண்டும் கொண்டு வருவதும், டாக்டர் ஜெய கோபாலின் பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்துவதும், பகுத்தறிவை பரப்புவதற்கான அவரது பணியை தொடர்வதற்கான ஒரு படியுமாகும்,” என்று நரேந்திரா கூறினார்.
எழுத்துப் பணியின் செழுமை
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய இந்திய நாத்திக சங்கத்தின் மத்தியக் குழு தலைவர் ஜே. ரவி பேசும்போது டாக்டர் ஜெய கோபாலின் செழுமையான எழுத்துப் பணி குறித்து விரிவாக எடுத்துரைத்தார். டாக்டர் ஜெய கோபால் பல மொழிகளில் 35க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார் என்றும், மனித உரிமைகள், சமூக நீதி மற்றும் இஸ்லாமிய நாடுகளில் பெண்களின் துயரம் போன்ற தலைப்புகளில் கவனம் செலுத்தியுள்ளார் என்றும் அவர் பார்வையாளர்களுக்குத் தெரிவித்தார்.
திருப்பதியை வாட்டிகன் நகராக்குவதா?
மேனாள் முதலமைச்சர் என்.டி. ராமாராவ் திருப்பதிக்கு வாட்டிகன் நகரம்’’ போன்ற சிறப்புத்தகுதி வழங்க முயன்றதைத் தடுத்து நிறுத்துவதில் டாக்டர் கோபால் வகித்த முக்கிய பங்கை அவர் நினைவுபடுத்தினார். டாக்டர் கோபால் மற்றும் அவரது குழுவினர் நடத்திய போராட்டங்களே அரசாங்கத்தை அந்தத் திட்டத்தை கைவிட வைத்தது என்றார்.
பகுத்தறிவாளர்கள் உப்புலேட்டி நரேஷ், ஒய். நூகராஜு, பேராசிரியர் வெங்கடேசுவரலு, ரவி சித்தார்த் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பகுத்தறிவு மற்றும் சமூக சீர்திருத்தத்திற்கான அவரது நிலையான பங்களிப்புகளுக்கு மரியாதை செலுத்தினர்.