ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றி 2026 சட்டமன்ற தேர்தலில்: தி.மு.க. 200 இடங்களில் வெற்றி பெற தொடக்கப் புள்ளி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

viduthalai
2 Min Read

சென்னை,பிப்.10- 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 இடங்களில் வெற்றிபெற ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றி தொடக்கப் புள்ளியாக அமைந்து இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

200 இலக்கு

2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக அணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன், ‘வெல்வோம் இருநூறு – படைப்போம் வரலாறு’ என்ற முழக்கத்தை நான் முன்வைத்தேன். ‘இருநூறு இலக்கு’ என்பதற்கான தொடக்க வெற்றியாக அமைந் திருக்கிறது இடைத்தேர்தல் கண்ட ஈரோடு கிழக்கு. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். அந்த மக்களுக்குரிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு திராவிட மாடல் அரசு, ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசுடன் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, நேற்றைய நாளில் (பிப்ரவரி 8) மாநிலம் முழுவதும் தி.முகழகத்தின் சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றன.

நிதி இல்லை

திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்று, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கவும், தமிழ்நாட்டு மக்களின் நலன்களைக் கெடுக்கும் வகையிலும் ஒன்றிய பாஜக அரசு தன் வஞ்சகப் போக்கைத் தொடர்ந்து மேற்கொள்வதைச் சுட்டிக்காட்டினேன். நான் என்ன உணர்வுடன் ஆவடிப் பொதுக்கூட்டத்தில் பேசினேனோ, அதே உணர்வுடன் தமிழ்நாடு முழுவதும் தி.மு.கழக மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் தி.மு.கழகத்தினர் பேசிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஒன்றிய பாஜக அரசிடம் ‘நிதியும் இல்லை, நீதியும் இல்லை’ என்று நெல்லையில் நடந்த விழாவில் நான் சுட்டிக்காட்டியதுபோலவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் புள்ளி விவரங்களுடன் நம்முடைய தி.மு.கழகத்தினர் உரையாற்றியிருக்கிறார்கள். இது வெறும் கண்டனக் கூட்டமாக முடிந்துவிடாமல், நல்லாட்சி தரும் திராவிட மாடல் அரசை முடக்குவதாக நினைத்து தமிழ்நாட்டை பாஜக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதையும், தமிழ்நாட்டில் பாஜகவினர் வெற்றிபெற முடியாது என்பதால் அமைதியைக் கெடுக்கும் வேலைகளைத் தூண்டி விடுவதையும் மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிய வைத்து, அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களின் நல்லிணக்க நிலமாக தமிழ்நாடு என்றும் தொடரவேண்டும் என்கிற உறுதியை ஏற்கக்கூடிய வகையிலே பொதுக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. வஞ்சிப்பது பாஜக அரசின் பழக்கம். அதனையும் எதிர்கொண்டு, தமிழ்நாட்டை வாழவைப்பது தி.மு.கழகத்தின் வழக்கம் என்பதை ஆவடிப் பொதுக்கூட்டத்தில் நான் உரையாற்றியபடி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான நம்முடைய பணிகள் தொடரும்.

நம்பிக்கை

மாநில உரிமைக்கான துணிச்சலான குரல் தொடர்ந்து ஒலிக்கும். சட்டத்தின் வழியே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் தி.மு.கழகம் முன்னணியில் இருக்கும். அதற்கான நம்பிக்கையை ஈரோடு கிழக்குத் தொகுதியின் வெற்றி நமக்கு அளித்திருக்கிறது.
இந்த வெற்றிப்பயணம் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்திடும் வகையில் தி.மு.கழக அரசின் செயல்பாடுகள் அமைந்திடும். அவை சரியாக நிறைவேறுவதை உறுதி செய்யும் வகையில், மாவட்டந்தோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளின் அடுத்தகட்டமாக பிப்ரவரி 21, 22 ஆகிய நாட்களில் கடலூர் மாவட்டத்திற்குப் பயணிக்க இருக்கிறேன். எங்கு சென்றாலும் மக்களின் மலர்ந்த முகம் கண்டு மகிழ்கிறேன். கடலூரில் கடலெனத் திரண்டு வரவேற்கக் காத்திருக்கும் பொதுமக்கள், உடன்பிறப்புகளின் மலர்ந்த முகங்களை இப்போதே என் மனக்கண்களில் காண்கிறேன்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *