எந்தத் துறையிலும் பிஜேபி ஆட்சி வெற்றி பெறவில்லை – அனைத்திலும் தோல்விதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

viduthalai
2 Min Read

சென்னை, பிப்.9 தமிழ்நாட்டின் வளர்ச்சியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. ஒன்றிய அரசு உங்களால் ஆன தடைகளை ஏற்படுத்துங்கள். அந்தத் தடைகளை தகர்த்தெறிந்து தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம் என்று ஆவடியில் நேற்று (8.2.2025) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரி வித்தார்.

ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பட்டிருப்பதைக் கண்டித்து சென்னை அருகே ஆவடி யில் நேற்று திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டின் உரிமை காக்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ளோம். பெரியார் மண்ணில் பெரும் வெற்றி கிடைத்துள்ளது. திருத்தணியைக் காக்கப் போராடியது போல இப்போது தமிழ்நாட்டின் உரிமையைக் காக்கும் வகையில் குரல் கொடுக்க ஒன்று கூடியுள்ளோம். தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது. ஒன்றிய நிதி நிலை அறிக்கை வெற்று அறிக்கையாகத்தான் இருக்கிறது. இதில், தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே எதுவுமில்லை. உழவர்களின் 4 ஆண்டுகள் போராட்டத்திற்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற எந்தத் திட்டமும் இல்லை. ஒன்றிய நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு சிறப்புத் திட்டங்கள் இல்லை. ரயில்வேயிக்கு கூடுதல் நிதி இல்லை. மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டத்திற்கு நிதி இல்லை. பெஞ்சல், மிக்ஜாம் புயலுக்கு நிவாரணம் தரவில்லை. மதுரை எய்ம்ஸ் நிதி ஒதுக்கவில்லை. கடன் தருகிறோம் என சொல்வது நியாயமா! ஒன்றியத்தில் நடப்பது ஆட்சியா அல்லது வட்டிக் கடையா? தமிழ்நாட்டைப் பிடிக்க வில்லை அதனால்தான் நிதி கொடுக்க மறுக்கிறார்கள்.

நீதியை அடையாமல்விட மாட்டோம்

நீங்கள் நிதி தராமல் இருக்கலாம். ஆனால் நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம். நீங்கள் வஞ்சிப்பவர்கள். நாங்கள் வாழ வைப்பவர்கள். பிரதமர் மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ஒன்றிய அரசிடம் என்ன எதிர்பார்த்தாரோ அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். தமிழ்நாடு வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் கெட்ட நோக்கத்துடன் ஆளுநர் பேசி வருகிறார். தொழிற்சாலைகள் வெளி மாநிலத்திற்குப் போவதாக எந்த ஆதாரத்தில் பேசுகிறார். ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பாராட்டுகிறது. ஆளுநர் பாராட்டு எங்களுக்குத் தேவையில்லை. நம்மை 2026-இல் ஆட்சியில் அமர வைக்க, ஆளுநரும், அண்ணாமலையும் போதும்.

மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்

தமிழ்நாடு வளர்ச்சியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று பார்க்கிறார்கள். புதுப்புது பிரச்சினையை கிளப்பி கலவரம், வன்முறை செய்யலாம் என்று செயல்படுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் தமிழர் என்ற உணர்வோடு மக்கள் வாழ்கிறார்கள். முடிந்தவரைக்கும் தடையை ஏற்படுத்துங்கள். நாங்கள் அந்தத் தடைகளை தகர்த்தெறிந்து தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம். உங்களுக்கும், உங்களுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுகவுக்கும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *