வாஷிங்டன், பிப். 8 தி ஹேக் நகரிலுள்ள அய்.நா.வின் நீதிப் பிரிவான பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளாா்.
ஹமாஸ் அமைப்பினருடனான மோதலின்போது போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக அந்த நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளதைக் குறிப்பிட்டு டிரம்ப் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.
இது தொடா்பாக டிரம்ப் பிறப்பித்துள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ஆபத்தான முன்னுதாரணம்
அமெரிக்காவையும், இஸ்ரேலை யும் குறிவைத்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அடிப்படை முகாந்திரம் அற்ற, சட்டத்துக்குப் புறம்பான கைது உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறது.
பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரவரம்புக்குள் அமெரிக்காவோ, இஸ்ரேலோ இல்லை. இருந்தாலும் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இதுபோன்ற உத்தரவுகளை அந்த நீதிமன்றம் பிறப்பித்துவருவது ஆபத்தான முன்னுதாரணம். இதனால் அமெரிக்க ராணுவத்தினருக்கும் குடிமக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் இதுபோன்ற தீய செயல்கள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் இறையாண்மையைக் குலைக்கும் வகையிலும், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன.
எனவே, அந்த நீதிமன்றத்துக்கு மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா அல்லது நட்பு நாடுகளுக்கு எதிரான விசாரணை யில் ஈடுபடுவதாக அமெரிக்கா கருதும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றுவோா் மற்றும் அவா்களது குடும்பத்தினரின் சொத்துகளை முடக்கவும், அவா்கள் அமெரிக்கா வருவதற்குத் தடை விதிக்கவும் இந்த அரசாணை மூலம் அதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, அய்.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து விலகவும் கல்வி, அறிவியல், கலாசார மேம்பாட்டுக்கான அய்.நா. பிரிவான யுனெஸ்கோ, பாலஸ்தீன அகதிகள் நலனுக்கான அய்.நா. பிரிவான யுஎன்ஆா்டபிள்யுஏ ஆகியவற்றுக்கான நிதி உதவியை நிறுத்தவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.