துக்கம் கொண்டாடும் வகை

viduthalai
1 Min Read

ஸ்ரீமான் வ.வே.சு. ஐயர் அவர்கள் காலமானதை ஆதாரமாகக் கொண்டு அனுதாபக் கூட்டங்கள் கூட்டிப் பேசுவோர், இந்த அக்கிரம உலகில் ஐயர் இருக்கக்கூடாது என்று கடவுள் அழைத்துக் கொண்டார் என்போரும், வரதராஜுலு நாயுடுவும், ராமசாமி நாயக்கரும் செய்யும் கிளர்ச்சியில் மனமுடைந்து இம்மாதிரி ஜனங்கள் முன் இருக்கக்கூடாது என்று நினைத்தும் போய்விட்டீர்களோ என்றும், பணம் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்க லாம் ஒரு ஐயரை சம்பாதிக்க முடியுமா என்று வரதராஜூலு நாயுடுவைக் கேட்பது போலவும் எத்தனையோ விதமாய்ப் பெண்கள் ஜாடை பேசுவதுபோல் பேசி மகிழ்கிறார்கள். இதே ஆசாமிகள், இதே சமயத்தில், வரதராஜூலு நாயுடுவும், ராமசாமி நாயக்கரும் பிரயாணத்தில் ரயில் எங்காவது விழுந்து ஒழிந்து போயிருப்பார்களானால் அப்போது என்ன பேசியிருப்பார்கள்?
டாக்டர் நாயர் லண்டனில் இறந்தபொழுது சிலர் பேசியதையும் பொது ஜனங்கள் நினைத்துப் பார்க்கட்டும். இவர்கள் இப்படிப் பேசி மகிழ்ந்தால் எதிர்க்கட்சியிலிருக்கிறவர்கள் என்ன பேசி மகிழ்வார்கள் என்பதையும், இப்படிப் பேசுகிறவர்கள் இறந்தவர்களுக்கு நன்மை செய்கிறார்களா? தீமை செய்கிறார்களா? என்பதையும் யோசித்துப் பார்க்கட்டும்.

– குடிஅரசு – கட்டுரை – 14.06.1925

வைக்கம்

வைக்கம் நிலைமையைப் பற்றி முரண்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கோவில் வீதிகளில் எல்லாச் சாதியாரும் தடையின்றி செல்லலாமென்று மகாராணியார் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக முதலில் செய்தி கிடைத்தது. ஆனால் அதற்குள் மகிழ்ந்து விடுவதற்கிடமில்லை யென்றும், இன்னும் பேச்சளவில்தான் இருந்து வருகிறதென்றும், மூன்று வீதிகளில் தீண்டாதார் செல்வதற்கு மட்டுமே கட்டளை பிறப்பிக்க சமÞதான அரசாங்கத்தார் செய்திருக்கிறார்களென்றும் கடைசியாக வைக்கத்திலிருந்து வந்த செய்தியால் தெரியவருகின்றன. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் மற்ற சமாதானங்களுக்கும் வழிகாட்டியாயிருக்கும் பெருமை திருவாங்கூர் சமாதானத்துக்கு கிடைக்காமலே போய் விடுமோவென அய்யுறுகிறோம். சத்தியாக்கிரஹிகளின் கடமை என்னவோ தெளிவாய் இருக்கிறது. பூரண வெற்றி கிடைக்கும் வரையில் அவர்கள் சத்தியத்தையும் அஹிம்சையையும் உறுதுணைகளாகக் கொண்டு போராட்டத்தை நடத்திவர வேண்டும்.
– குடிஅரசு – செய்தி – 21.06.1925

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *