திருப்பரங்குன்றம் விவகாரம் வடமாநிலங்களைப் போல் தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி

Viduthalai
3 Min Read

பி.ஜே.பி. மீது அமைச்சர் பி.கே.சேகர்பாபு குற்றச்சாட்டு

சென்னை, பிப்.6- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வடமாநிலங்களைப் போல் தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை ஏற்படுத்த பி.ஜே.பி. முயற்சி செய்கிறது என்று அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டினார். செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் கோயிலை பொறுத்த அளவில் நேற்றைக்கு அங்கே ஒரு பெரிய கூட்டத்தை கூட்டி மதவாதம், இனவாதம், மொழிவாதம் என்று பிரிவுகளை ஏற்படுத்த நினைத்தார்கள். வட மாநிலங்களில் வேண்டுமென்றால் இதற்கு உண்டான சாத்திய கூறுகள் அமையக்கூடும். எச்.ராஜா, அண்ணாமலை போன்றவர் களுக்கு சொல்லிக் கொள்வது என்ன வென்றால் எங்கள் முதலமைச்சர் எங்களை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லி இருக்கின்றார். நீங்கள் வட மாநிலங்களைப் போல் இங்கும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றீர்கள். இங்கே இருக்கின்ற முதலமைச்சர் உறுதிமிக்க முதலமைச்சர், இரும்பு மனிதர். எங்கு கலவரங்கள் ஏற்பட்டாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்க தயாராக இருக்கின்றார். ஆகவே இந்த பெரியார் மண்ணில், திராவிட மண்ணில், திராவிட மாடல் ஆட்சியில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஒரு காலமும் அனுமதிக்க மாட்டார்.

அரசியல் குளிர்கால நினைக்காதீர்!
திருப்பரங்குன்றம் மலையைப் பொறுத்தளவில் 1920ஆம் ஆண்டு மதுரை சார்பு நீதிமன்றமும், 1930ஆம் ஆண்டு லண்டன் பிரிவி கவுன்சிலும் ஓர் உத்தரவை வழங்கி இருக்கின்றது. அதைத் தொடர்ந்து 1958, 1975, 2004, 2017, 2021 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்றன. 2023 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இந்த கடந்த காலங்களில் எந்தெந்த அடிப்படையில் ஏழு வழக்குகளில் நீதிமன்ற உத்தரவு வழங்கியதோ அந்த நீதிமன்றத்தின் உத்தரவிற்கேற்றாற்போல் தான் இந்த அரசு அதை மதித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மாமன் மச்சான் உறவு!
ஆனால் இதை வைத்து அரசியல் குளிர்காயலாம் என்று இந்த பிரச்சினையை கையில் எடுப்பவர்களுக்கு சொல்லிக் கொள்வது, எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையோடு செயல்படும் இந்த அரசு நீதிமன்றம் என்ன வழிகாட்டுகின்றதோ அதன்படி தான் செயல்படும். முதலமைச்சர் அவர்கள் அனுமதியோடு கூடிய விரைவில் துறையின் அமைச்சர் என்ற வகையில் அந்த மலைக்கு செல்ல இருக்கின்றேன். கோயில் நிர்வாகம் மற்றும் தர்கா தரப்பினருக்கும் வழி பாட்டு முறைகளில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் நீதிமன்ற உத்தரவு அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு வருகின்றன. அங்கே இஸ்லாமியர்களும், இந்துக்களும் மாமன் மச்சான்களாக சகோதரத்துவத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் அவர்களை அன்னியப்படுத்தி அதன் மூலம் தேர்தலில் லாபம் காணலாம் என்று நினைக்கின்றார்கள். இந்த பிரச்சினையில் அவர்கள் எடுத்திருக்கின்ற நடவடிக்கைகளால் மக்கள் வெகுண் டெழுந்து 2026ஆம் ஆண்டு தேர்தலில் அவர்களுடைய வாக்கு சதவீதம் பூஜ்ஜியத்தை அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

நேற்றைக்கு அங்கே கூடிய கூட்டத்தை பார்த்திருப்பீர்கள். ஒரு மதத்திற்கு ஓர் இனத்திற்கு எதிராகத் தான் கோசங்களை போட்டுக் கொண்டிருந்தார்கள். பொறுப்புள்ளவர் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற பாரதிய ஜனதாவில் இருப்பவரே ஒலிப்பெருக்கியை பிடித்து மதத்தால், இனத்தால் மக்களை வேறுபடுத்திக் கொண்டிருக்கின்றார். இந்த ஆட்சியைப் பொறுத்தளவில் எல்லோருக்கும் எல்லாம். ஏற்கெனவே என்ன வழி பாட்டு நெறிமுறைகள் இருந்ததோ என்ன வழிபாட்டை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்களோ, அதுவே தொடரும். நீதிமன்ற தீர்ப்பின் அடிப் படையில் முதலமைச்சர் அவர்கள் செயல்படுவதற்கு தயாராக இருக்கின்றார்.

இரட்டை நாக்கு படைத்தவர்!
உள்ளாட்சித் தேர்தலில் கூட பிரதி நிதியாக முடியாத ஒருவர் இருக்கிறார். அவர் நீதிமன்றங் களை தேவையில்லாத போது தலைக்கு மேலே இருக்கின்றதை காட்டி இதற்கு சமம் என்றும், தேவை இருக்கின்றபோது நீதிமன்ற தீர்ப்பை ஆஹா ஓஹோ என்றும் பேசும் இரட்டை நாக்கு படைத்தவர். இனத்தால், மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்று தான் அவருடைய நோக்கம். அவர் ஒரு மனிதனே அல்ல. ஆகவே அவருடைய கூற்றுக்களை எடுத்து இது போன்று விஷமப் பிரச்சாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்று பத்திரிகை நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *