செய்தித் துளிகள்

viduthalai
1 Min Read

அனைத்து பள்ளிகளிலும் கணக்கீடு!

மாநிலம் முழுவதும் கற்றல் அடைவுகள் தொடர்பான ஆய்வுகள் தொடங்க இருக்கின்றன. இன்று முதல் (5.2.2025) மூன்று நாள்கள் நடைபெறவிருக்கும் இந்த ஆய்வுகளில் 3ஆவது, 5ஆவது, 8ஆவது படிக்கும் மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவர்கள் இந்த சர்வேயில் பங்கு பெறுவர். இதன் முடிவுகளின் அடிப்படையில் கல்வியின் தரம், மாணவர்களின் திறன் ஆகியவை கணக்கிடப்பட்டு அடுத்த ஆண்டுக்கு பயன்படுத்தப்படும்.

நாடு கடந்த தமீழழ அரசு சீமானுக்கு கண்டனம்

தந்தை பெரியாரையும், பிரபாகரனையும் எதிரெதிர் துருவங்களாக சீமான் சித்தரிப்பதை ஏற்க முடியாது என நாடு கடந்த தமிழீழ அரசாங்க அமைப்பின் பிரதமர் ருத்ரகுமாரன் விமர்சித்துள்ளார். சீமானின் அணுகுமுறை தமிழீழ மக்களின் போராட்டத்துக்கு, தமிழ்நாடு மக்கள் அளித்து வரும் ஆதரவுக்கு கேடு விளைவிக்கும் என்றும் சாடியுள்ளார். பிரபாகரனின் கருத்துகளை தனது அரசியலுக்காக மாற்றிப் பேசுவது அறம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விற்கப்படும்
135 மருந்துகள் தரமற்றவை

இந்தியாவில் 135 தரமற்ற மருந்துகள் விற்கப்படுவதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பரில் 1000க்கும் மேற்பட்ட மருந்துகளின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இதில், பெரும்பாலானவை கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் என்பது தெரியவந்துள்ளது.

திராவிடத்தை ஒழிப்பதாகக் கூறும் புல்லுருவிகள்

விடுதலைப் புலிகளின் மறைந்த தலைவர் பிரபாகரனுடன் 23 நாள்கள் இருந்ததாக மதிமுக நிறுவனர் வைகோ தெரிவித்துள்ளார். சீமான் குறித்த தற்போதைய சர்ச்சைக்கும் பதிலளித்த அவர், புலிகளின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் சிலர் பேசுவது தமிழீழத்திற்கு செய்யும் அநீதி என்றார். மேலும், திராவிடத்தை ஒழிப்பதாக சில புல்லுருவிகள் பேசி வருவதாகவும் சாடினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *