செயல்வீரர் திருவெறும்பூர் மாரியப்பன் மறைவிற்கு வீர வணக்கம்

viduthalai
1 Min Read

திருவெறும்பூர் ஒன்றியத் திராவிடர் கழகத் தலைவராக இருந்த வ.மாரியப்பன் (வயது 64) நேற்று (03.02.2025) நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்ற அதிர்ச்சித் தகவல் அறிந்து வருந்துகிறோம்.

பெல் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளராக சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியவர், தொழிலாளர் உரிமைகளுக்காகத் தொழிற்சங்கத்தில் பொறுப்பேற்று, இறுதிவரை உழைப்பைக் கொடுத்தவர். ஓய்விற்குப் பிறகு தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்தார்.

இளைஞராக இருந்த காலந் தொட்டு, திராவிடர் கழகத்தில் இருந்தவர். எனது தலைமையில், திருமணம் செய்து கொண்டவர். விடுதலை, உண்மை முகவராக 20 ஆண்டுகளுக்கு மேலாகச் செயலாற்றியவர். எப்போதும் தனது “தோள்” பையில் தொழிலாளர் நலன் மற்றும் திராவிடர் கழகத் துண்டறிக்கைகளை வைத்திருப்பார்.

நிகழ்ச்சிகளுக்குக் கொடி கட்டுவது, சுவரொட்டி ஒட்டுவது என அனைத்து வேலைகளையும் தனி ஒருவராகச் செய்து முடிக்கும், சுறுசுறுப்பு மிக்க தோழர். நேற்றைய தினம் பணி முடித்து வந்த நிலையில் சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பது அதிர்ச்சி தரும் தகவலாகும். இவருக்கு விஜயா என்கிற இணையரும், வெற்றிமணி என்கிற மகளும் உள்ளனர்.

தோழர் மாரியப்பன் அவர்களின் எதிர்பாரா முடிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

செயல் வீரருக்கு வீர வணக்கம்!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
4.2.2025

குறிப்பு: மறைந்த மாரியப்பன் அவர்களின் மகள் வெற்றிமணியிடம் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசி மூலம் ஆறுதல் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *